வறுமையின் கொடுமை காரணமாக நாட்டை விட்டுத் தப்பி ஓடும் மக்கள்- வலியுறுத்தல் விடுத்துள்ள சுமந்திரன்!
வடக்கில் மன்னார் மற்றும் வவுனியாவிலிருந்து இரண்டு நாட்களில் 16 பேர் படகு மூலமாக இந்தியாவிற்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வறுமை, கொடுமை காரணமாகவே அவர்கள் இவ்வாறு அயல் நாட்டில் சென்று தஞ்சமடைந்துள்ளனர் என இன்று சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் என அனைவரையும் வெகுவாகப் பாதிப்படையச் செய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் தற்போது ஆட்சியிலிருப்பவர்களுடன் பேச வேண்டிய கட்டாயம் மக்கள் பிரதிநிதிகளான எமக்கு இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே தான், கூட்டமைப்பிலிருந்து இரா.சம்பந்தன், சித்தார்த்தன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வறுமை கொடுமை காரணமாக நாட்டை விட்டு மக்கள் ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.