தென்னிலங்கையில் மீண்டும் போராட்டம் தீவிரம்- கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன் போது பேரணில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
காலி முகத்திடல் நோக்கி பேரணி
காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகை ஆகிய பகுதிகளில் அமைதியான முறையில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடந்த மே 9ஆம் திகதி குழுவொன்றால் தாக்கப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் இடம்பெற்று ஒரு மாதம் பூர்த்தியாவதை நினைவு கூர்ந்தும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்படாமையை கண்டித்தும் இன்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கண்ணீப்புகைத் தாக்குதல்
இந்த ஆர்ப்பட்டத்தில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டதோடு, புகையிரத நிலையத்திலிருந்து காலி முகத்திடல் நோக்கி எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.
அதன் போது காவல்துறை தலைமையகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்சாக்களின் முகமூடி உருவம்
அதேவேளை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உருவம் பொறிக்கப்பட்ட முகக்கவசத்துடன் சேலை அணிந்து நபரொருவர் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் உருவப் பொம்மைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டம் காரணமாக கொழும்பு கோட்டையைச் சுற்றியுள்ள பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.