பெற்றோரின் மூட நம்பிக்கையால் பறிபோன சிறுவனின் உயிர்!
பெற்றோரின் மூட நம்பிக்கையால் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சிறுவனின் தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
படல்கமுவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆதிமுல்ல பிரதேசத்தில் வீடொன்றின் அறையொன்றில் 10 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியமை தொடர்பில் காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து குறித்த வீட்டை சோதனையிட்ட போதே சிறுவனின் சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த 7ஆம் திகதி குறித்த சிறுவனின் தொண்டையில் சளி சிக்கியதால் சுகயீனமுற்றுள்ளதாகவும், நோய் குணமடைவதற்காக பெற்றோர்கள் மத வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான மத வழிபாடுகளின் போதே சிறுவன் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. பின்னர் சிறுவனின் உயிரை மீட்க வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்படவுள்ளதுடன் பிரேத பரிசோதனை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், படல்கமுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.