கட்டுப்பாடு இன்றி நீடிக்கும் அந்நிய செலாவணி வீதம்- மேலும் அதிகரிக்கவுள்ள டொலரின் பெறுமதி!
அந்நிய செலாவணி வீதங்கள் கட்டுப்பாடு இன்றி நீடித்தால், மே, ஜூன் மாதளவில் அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 400 ரூபாயை தாண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் குணபால ரத்னசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
டொலர் கட்டுப்பாட்டை கைவிட்டதன் பின்னர் அதன் பெறுமதி 300 ரூபாய் என்ற மட்டத்திற்கு வந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை காரணமாக எதிர்வரும் காலங்களில் மக்களால் தாங்க முடியாத அளவுக்கு வழ்க்கைச் செலவு கட்டாயம் அதிகரிக்கும்.
மே, ஜூன் மாதங்களில் டொலரின் பெறுமதியானது 400 ரூபாய் என்ற மட்டத்திற்கு வந்து விடும் என்பது தனது மதிப்பீடு எனவும் ரத்னசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 289.99 ரூபாயாக அதிகரித்துள்ளது. டொலரின் பெறுமதி அதிகரித்து, ரூபாயின் பெறுமதி குறைந்துள்ள நிலையில், அத்தியவசிய மற்றும் அத்தியவசியமற்ற பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.