இலங்கை மக்களின் நிலை குறித்து வருத்தம் தெரிவிக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்
நாட்டு மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான நிலைமை குறித்து வருத்தப்படுவதாக சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் புஷ்பகுமார (Jagath Pushpakumara) தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தக் கஷ்டமான நிலைமையிலிருந்து மக்களை மீட்க அரச தலைவர், பிரதமர் உட்பட ஆட்சியாளர்கள் தங்களால் எடுக்க முடிந்த அனைத்துவிதமான முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையிலிருந்து அவர்களை எப்படி மீட்டெடுப்பது என்பது தெரியவில்லை. அன்றாடம் உழைக்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மின் வெட்டு, எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு இவர்களைப் பெரிதும் பாதிக்கும். உடனடியாக இதற்கு ஒரு தீர்வைக் கண்டாக வேண்டும்.
மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரச தலைவர், பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடனுதவிகளை வழங்கும் தரப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மேலும் சில தரப்பினருடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி வருகின்றோம். சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்த வேண்டாமென எமது அமைச்சர்களே கூறியதால், நிதியத்துடனான செயற்பாடுகளை மேற்கொள்ளத் தாமதமானது.
இறுதியில் சர்வதேச நாணய நிதியத்திடமே செல்ல நேரிட்டுள்ளது. கடன்களை மறுசீரமைப்புச் செய்து, சுமையைக் குறைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. மறுபுறம் நிவாரண அடிப்படையில் டொலர்களைப் பெற்று, டொலர் தட்டுப்பாட்டை நீக்கி மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.