கோட்டாபய-மஹிந்த அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றிய பௌத்த தேரர்களின் எதிர்ப்பிலும் சமர்ப்பிக்கப்படவுள்ள வரைபு!
கடந்த மூன்றரை வருடங்களுக்கும் மேலாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துகின்ற புதிய வரைபு அமைச்சரவையில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் சமர்பிக்கப்படவுள்ளது என மாகாண சபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மைத்திரி- ரணில் தலைமையிலான கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது.
எனினும் இந்த தேர்தலை நடத்துவதற்கான வரைபினை எதிர்வரும் இரண்டு வாரங்களிற்குள் அமைச்சரவையில் சமர்பிக்க தீர்மானித்துள்ளதாக மாகாண சபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இதேவேளை, மாகாண சபைகளினால் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுவதாகவும், அந்த தேர்தலை அரசாங்கம் நடத்தக்கூடாது என்றும் கோட்டாபய-மஹிந்த அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றுவதற்குப் பெரிதும் பாடுபட்ட பௌத்த தேரர்களும், அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
இந்த எதிர்ப்பையும் மீறி கடந்த வாரம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவர்கள் தவிர, மாகாண சபைகளில் உறுப்பினர்களாக செயற்பட்ட பொதுஜன முன்னணியினரும் அரச தலைவர் கோட்டாபயவை சந்தித்து தேர்தலை விரைந்து நடத்துவதற்கான கோரிக்கையையும் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசாங்கத்திற்குள் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி குறித்து தீர்மானங்களை எடுக்க ராஜபக்ச குடும்பத்தினர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சந்திப்பொன்றை நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பின் போதும் மாகாண சபை விவகாரம், ஜெனீவா விவகாரம், காடழிப்புக்களினால் ஏற்பட்டுள்ள மக்கள் எதிர்ப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு என பல விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.