இரண்டு வாரங்களுக்குள் சிறிலங்காவில் முக்கிய தீர்மானம் - போராட்டகாரர்கள் தொடர்பில் அறிவிப்பு!
சிறிலங்காவில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இதனடிப்படையில், சர்வக்கட்சி அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆகவும் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கையை 32 ஆகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை அரசியல் கட்சிகளுடன் மாத்திரமின்றி போராட்டகாரர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் அமைச்சர்கள் நியமனம்
இதனடிப்படையில் நேற்று பதவியேற்ற 18 அமைச்சர்களுக்கு மேலதிகமாக மேலும் 12 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த சிலருக்கும் அமைச்சு பதவிகள் கிடைக்க உள்ளதாக தெரியவருகிறது.
இவர்களில் மனோ கணேசன், றிசார்ட் பதியுதீன், பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான் ஆகியோரும் அடங்குவதாக கூறப்படுகிறது.
அத்துடன் நிதியமைச்சர் பதவியை அதிபரின் பொறுப்பின் கீழ் வைத்திருப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.