அரசாங்கத்தில் இருந்துகொண்டு அரசாங்கத்தையே விமர்சிப்போரை உடனடியாக நீக்க வேண்டும்!
அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு அரசாங்கத்தின் தவறுகளை விமர்சிக்கும் அனைவரையும் அரசாங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
அரசாங்கத்தை விமர்சிக்கும் அனைவரையும் நீக்க வேண்டும். அரசாங்கத்தில் இருந்துகொண்டு அரசாங்கத்தை விமர்சிக்க முடியாது. அரசாங்கத்தில் இருக்கின்றனர். அமைச்சர் பதவிகளையும் ஏனைய பதவிகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதனால், அரசாங்கத்தை விமர்சிக்கும் யாராக இருந்தாலும் நீக்க வேண்டும். அரசாங்கம் மக்களுக்கு மிகப் பெரிய சேவைகளை செய்து வருகிறது. சில தவறுகள், குறைப்பாடுகள், முடிவுகளை எடுக்க நேரிட்டுள்ளது.
எனினும் இந்த முடிவுகளை அரசாங்கமோ, அரச தலைவரோ எடுத்த முடிவுகள் அல்ல. அரசாங்கம் இயக்கும் சில இடங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள். இதனால், இவற்றை பேசக் கூடிய இடங்களாக நாடாளுமன்ற குழுக் கூட்டம், நாடாளுமன்றம் இருக்கின்றது.
அரசாங்கத்தின் குறைகளை இந்த இடங்களில் கூறாது, பொது இடங்களில் கூற வேண்டிய அவசியமில்லை. அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை என்னால் கூற முடியும். எனினும் அரசாங்கத்தில் எவராவது செய்யும் தவறுகளை என்னால் கூற முடியாது.
அரசாங்கத்தை விமர்சிப்போர் அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும். அரசாங்கத்தை நடத்தக் கூடிய பலர் இருக்கின்றனர். 150க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களிடம் இருக்கின்றனர்.
அவர்களில் திறமையான பலர் இருக்கின்றனர். இதனால், இந்த திறமைசாலிகளுக்கு இடமளித்து, விலகிச் செல்ல வேண்டியவர்களுக்கு விலகிச் செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் இந்திக அனுருத்த குறிப்பிட்டுள்ளார்.