ஆப்கானிஸ்தானின் நிலைக்கு சென்றுள்ள இலங்கை - விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை
இலங்கை, ஜப்பானுக்கு நிகராக பொருளாதார ரீதியில் இருந்த காலம் சென்று தற்போது ஆப்கானிஸ்தான் இருக்கின்ற இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டதாக முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையில் இருந்து மீட்சிபெற விரைந்து சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை அரசாங்கம் பெற வேண்டும் என்ற ஆலோசனையை அவர் முன்வைத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் சமூக வலைத்தளமொன்றில் காணொளியொன்றை பதிவிட்டுள்ளார்.
எந்த சந்தர்ப்பத்திலும் பழைய அரசியல் புராணத்தைப் பாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், இனவாத, மதவாத அரசியலை ஸ்ரீலங்கா மக்கள் இன்று வெறுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“எதிர்காலத்தைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். பழைய முறைகளுக்கு நாங்கள் மீண்டும் செல்லமுடியாது. முன்னணிகளை அமைத்தோம் என்பதால் வெற்றியடையவும் முடியாது. மக்களுக்கு தற்போதைய நிலைமையிலிருந்து எப்படி மீண்டெழுவது என்பதையே தெரிவிக்க வேண்டும். அப்படியொரு வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் உள்ளதா?
ஸ்ரீலங்கா நாடு இன்று மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. நாங்கள் பிறந்த காலம்தொட்டு இதுவரையிலும் ஜப்பானுடன் இருந்தோம். ஆனால் இன்று ஆப்கானிஸ்தானுடன் இருக்கின்றோம்.முதலாவதாக குறுகிய கால நிவாரணத்தை மக்களுக்கு அளிக்க வேண்டும். இன்று கொவிட் தொற்று நெருக்கடி மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
நாங்கள் கொவிட் நெருக்கடியைக் கட்டுப்படுத்தக்கூடிய வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும். மற்றைய நாடுகளைப் போன்று மருத்துவ ஆலோசனைக் குழு மற்றும் அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துகிற நிர்வாகக் குழு நியமிக்கப்படல் அவசியம். இதுசார்ந்த தீர்மானங்களை அமைச்சரவை மேற்கொள்ள வேண்டும்.
அமைச்சரவை நியமனங்களை நியமித்தால் மட்டும் போதாது. நாடாளுமன்றத்தின் ஊடாக தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவும் வேண்டும். எமக்கு இன்று கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய வெளிநாட்டு செலாவணி இல்லை.18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி அளிக்க முடியாதிருக்கின்றது.
அதனால் விரைந்து அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று உதவிகேட்க வேண்டும். அங்கிருந்து கிடைக்கின்ற நிவாரணத்தின் ஊடாக ஏனைய நாடுகளின் உதவிகளையும் நாட வேண்டும்”என தெரிவித்துள்ளார்.