நாட்டை துண்டாடப் பார்க்கும் இந்தியா - வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் 13ஆம் திருத்தம்!
இந்தியாவால் 13 ஆவது திருத்தச் சட்டம் இலங்கைக்குப் பலவந்தமாகத் திணிக்கப்பட்டது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் 13ஆவது திருத்தச் சட்டம் முற்றாக அகற்றப்பட வேண்டும் என்பது தான், எனது நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“13 ஐ நடைமுறைப்படுத்தினால் ஒற்றையாட்சியின் கீழ் இருக்கின்ற நாடு சமஷ்டி ஆட்சிக்கு உட்படும். இதனால் நாடு துண்டு துண்டாகப் பிரியும். அவ்வாறு பிரிவினையை விரும்பும் தமிழ் அரசியல்வாதிகளும் புலம்பெயர் தமிழர்களுமே சமஷ்டியைக் கேட்கின்றனர்.
துண்டு துண்டாகும் நாடு
வடக்குத் தமிழர்களின் துன்பத்தைப் போக்குவதற்குத் தான் சமஷ்டி தேவை என்று தமிழ் அரசியல்வாதிகள் கேட்கின்றார்கள். அப்படியென்றால் 52 வீதமான தமிழர்கள் வாழ்வது தெற்கில். வடக்குக்கு சமஷ்டியைக் கொடுத்தால் தெற்குத் தமிழர்களின் பிரச்சினைகளை அது எப்படித் தீர்க்கும்?
தமிழ் நாட்டின் ஆதரவைப் பெறுவதற்காகத் தான் இந்திய அரசு, அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை வடக்குக்குக் கொடுப்பதற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.
இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் சமஷ்டியைக் கேட்கவில்லை. மாறாக தமிழ் அரசியல்வாதிகளும் புலம்பெயர் தமிழர்களுமே சமஷ்டியைக் கோருகின்றனர்.
இந்தியாவின் அழுத்தம்
ஒற்றையாட்சியின் கீழ் நாடு முழுவதும் ஒரே நீதி கிடைக்கும். ஆனால், சமஷ்டி ஆட்சியின் கீழ் மாகாணத்துக்கு மாகாணம் நீதி வேறுபடும். இதேவேளை, பிரிவினையை விரும்பும் தமிழ் அரசியல்வாதிகளுடன் சில சிங்கள அரசியல்வாதிகளும் இதற்கு உதவுகின்றனர்.
தமிழ் நாட்டின் ஆதரவைப் பெறுவதற்காகத்தான் இந்திய அரசு 13ஐ வடக்குக்குக் கொடுப்பதற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. 13 ஆவது திருத்தச் சட்டம் இந்தியாவால் இலங்கைக்குப் பலவந்தமாகத் திணிக்கப்பட்டதுதான்.
அவ்வாறு 13 ஆவது திருத்த சட்டம் கொண்டுவந்தால், இதில் இருக்கின்ற காவல்துறை அதிகாரம் வழங்கப்பட்டால் பிரதி காவல்துறைமா அதிபர் முதலமைச்சரின் கீழ் வருவார்.
தனி காவல்துறை, இராணுவ பிரிவு
அப்போது காவல்துறை அரசியல் மயமாகிவிடும். அநேகமாக 13 இல் இருக்கின்ற பல விடயங்கள் கொடுக்கப்பட்டுவிட்டன. காணி மற்றும் காவல்துறை அதிகாரம் தான் கொடுக்கப்பட வேண்டியுள்ளது.
காவல்துறை அதிகாரத்தைக் கொடுத்தால் வடக்கின் கடல் பாதுகாப்புக்கு என்று தனியான காவல்துறை இராணுவப் பிரிவை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னால் மத்திய அரசு அதை எதிர்க்கும்.
அப்போது இரு தரப்புக்கும் பிரச்சினை ஏற்படும்.
அரசு மாகாண சபையின் தீர்மானத்துக்கு இடம் கொடுப்பதில்லை என்று கூறி பிரிந்து செல்வதற்கு வாய்ப்புண்டு” எனவும் தெரிவித்துள்ளார்.
