இலங்கை விடயங்களை கையாள இதுவே வழி!! இந்தியாவுக்கு அட்வைஸ்
இலங்கை விடயங்களை கையாள்வதற்கு இந்தியா அமைச்சரவை அந்தஸ்துள்ள விசேட தூதுவர் ஒருவரை நியமிப்பதே பொருத்தமானதாகும். இத்தகைய நியமனம் ஒன்றின் ஊடாக இலங்கை விடயங்களை கையாள்வதே இந்தியாவுக்கு தற்போதுள்ள இராஜதந்திர மூலோபாயத் தெரிவாக இருக்கும் என்கிறார் இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக.
இலங்கையின் அண்மைக்கால விடயங்களில் இந்தியா அதிகளவில் கரிசணை கொண்டுள்ள நிலையில் இலங்கை விடயங்களை உயர்ந்த மட்டத்தில் கையாள்வதற்கு உடனடியாக விசேட தூதுவரை நியமிக்க வேண்டும் என தயான் ஜயதிலக யோசனை முன்வைத்துள்ளார்.
கொல்கத்தாவைத் தளமாக கொண்டு இயங்கும் திலோத்தமா அமையத்தின் ஏற்பாட்டில் ‘இலங்கையில் சீனாவின் தலையீடு’ என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கின் ஆரம்ப உரையில் அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
குறித்த சர்வதேச கருத்தரங்கில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
இலங்கையானது தெற்காசிய பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துமான இடத்தில் அமைந்திருக்கும் தீவாகும்.
இதனால் இலங்கையின் மீது பல நாடுகளுக்கு கரிசனைகள் அதிகமாகவே உள்ளன. அந்த வகையில், இலங்கை இதுவரை காலமும் அணிசேராக் கொள்கையை பின்பற்றி அனைத்து நாடுகளுடனும் இருதரப்பு உறவுகளை சுமூகமாகவே கொண்டு வந்திருந்தது.
ஆனால், இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் வெளிவிவகாரக் கொள்கையிலிருந்து விலத்தியிருக்கின்றார்கள்.
இதுபற்றிய பல கரிசனைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக இலங்கை சீனாவின் பக்கம் சார்ந்து விட்டதாக பகிரங்கமான விமர்சனங்கள் உள்ளன.
சீனா தனது கனவுத்திட்டமான பட்டி மற்றும் பாதை திட்டத்தில் இலங்கையையும் இணைத்துக்கொண்டு தெற்காசியாவில் நகர்ந்து கொண்டிருக்கின்றது.
அதுமட்டுமன்றி இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கும் கடன்தொகைகளையும் பாரிய அபிவிருத்தித்திடங்களிலும் முதலீடுகளைச் செய்து வருகின்றது. அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தினைக் குறிப்பிட முடியும்.
இந்தத் திட்டம் இலங்கையின் எதிர்காலத்திற்கு முக்கியமானதாக கருதப்படுகின்றபோதும் இதனால் சீனாவின் தலையீடுகள் இலங்கையில் அதிகரித்து விடும் என்ற கரிசனை இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குல நாடுகளுக்கு அதிகமாகவே உள்ளது.
குறிப்பாக இந்தியாவுக்கு அதன் தேசியபாதுகாப்புடன் தொடர்புபட்ட விடயமாக உள்ளது. வடஇந்தியாவின் லடாக் பகுதியில் சீனாவுடனான எல்லை விவகாரங்கள் காணப்பட்டு வரும் நிலையில் தென் இந்தியாவில் அவ்விதமான நிலைமைகளை தவிர்ப்பதற்கு இந்தியா அதிகளவில் ஈடுபாட்டினைக் கொண்டிருக்கின்றது.
ஆனால், சீனாவைப் பொறுத்தவரையில் இலங்கை விடயத்தில் உயர்மட்ட நகர்வுகளையே மேற்கொண்டு வருகின்றது.
இறுதியாக சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வருகை தந்திருந்தார். அதற்கு முன்னதாக கம்னியூஸ்ட் கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான பிரதிநிதி வருகை தந்திருந்தார். இவ்விதமான விஜயங்கள் இலங்கையுடன் உயர்மட்ட அணுகுமுறைகளை முன்னெடுப்பதற்கு சீனாவுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
இதனைவிடவும், சீனாவின் கம்னியூஸ்ட் கட்சியானது இலங்கையின் ஆளும் கட்சியாக இருக்கும் பொதுஜனபெரமுனவுடன் இருதரப்பு தொடர்புகளை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கின்றது இவ்விதமான சீனாவின் உயர்மட்ட அணுகுமுறைகளுக்கு நிகராக இந்தியாவின் அணுகுமுறைகள் அண்மைய காலங்களில் காணப்படவில்லை.
80களில் இலங்கை விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைகள் முற்றிலும் மாறுபட்டதாகவே இருந்தது. விசேட கவனம் கொள்ளப்பட்டு விசேட பிரதிநிதிகள் அமர்த்தப்பட்டு இலங்கை விடயங்கள் கையாளப்பட்டன.
ஆனால் பின்னரான நிலைமையில் அவ்விதமான செயற்பாடுகள் இடம்பெற்றிருக்கவில்லை.
ஆனாலும் தற்போதைய மத்திய அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இலங்கை விடயத்தில் நீண்ட அனுபவம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள் என்றார்