உலக பொருளாதாரத்திற்குள் நுழையும் சிறிலங்காவின் திட்டம் - வெளியான அறிவிப்பு!
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, நாட்டின் சர்வதேச வர்த்தகத்தை ஒருங்கிணைக்க, சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2023 வரவு செலவுத் திட்ட உரையில் அறிவிக்கப்பட்டபடி குறித்த அலுவலகம் நிதி அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்டு, பின்னர் வெளிவிவகார அமைச்சுடன் இணைக்கப்படுமென அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சர்வதேச வர்த்தகம் தொடர்பான நிறுவனங்களால் தனித்தனியாக மேற்கொள்ளப்படும் அணுகுமுறைகளில் காணப்படும் குறைபாடுகளைத் தவிர்ப்பதன் மூலமும் அதன் செயற்பாடுகளை மிகுந்த செயற்திறனுடனும் முறையாக மேற்கொள்ளும் வகையிலும் International Trade Office எனப்படும் சர்வதேச வர்த்தக அலுவலகம் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இலக்கு

இதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, இலங்கையின் பொருளாதாரத்திற்கு சர்வதேச வர்த்தகத் துறைகளின் உச்சபட்ச பங்களிப்பினை வழங்க இதன் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
முதலில் தெற்காசியாவுடன் இணைந்தும், பின்னர் கிழக்கு நோக்கி விஸ்தரிப்பதன் மூலம், சீனா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவுடன் இணைந்து, இறுதியாக உலகின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் மக்கள்தொகையில் 30 சதவீத உரிமையைக் கொண்டுள்ள “பிராந்திய விரிவான பொருளாதார கூட்டணியுடன் இணைவதே இலங்கையின் இலக்காகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிபர் செயலகத்தில் பணிகள்

சர்வதேச வர்த்தகத்துக்கென பிரத்தியேகமான அலுவலகம் ஒன்று அமைக்கப்படும் வரை, அதன் பிரதான உத்தியோகத்தர்களின் தேவையை நிறைவு செய்வதற்காக அதன் பணிகள் அதிபர் செயலகத்தில் முன்னெடுக்கப்படும் எனவும் அதிபர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.