யாழில் சிறிலங்கா படையினரால் தாக்கப்பட்ட உறவுகள்- பேரணிக்கு பகிரங்க அழைப்பு!
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் கண்டனப் பேரணியொன்றை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்புக்களின் தலைமையில் இன்றைய தினம் காலை 10 மணியளவில் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
கலந்துரையாடலுக்கு பின்னர் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் செயலாளர் அ.லீலாவதி கருத்துத் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கும் கண்டனப் பேரணி முற்றவெளியில் நிறைவடையும். இந்த பேரணியில் கட்சி மற்றும் அரசியல் ரீதியான வேறுபாடுகளை கடந்து இந்த போராட்டத்தை எதிர்கொள்ள தீர்மானித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.