நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு அரசியல் தஞ்சம்- சிறிலங்கா அரசுக்கு மறைக்கப்பட்ட தகவல்; அம்பலப்படுத்திய சிங்கள ஊடகம்!
சுவிஸர்லாந்து, 840 தமிழர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்கி உள்ளது என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள சுவிஸர்லாந்து தூதரகம், இவர்கள் சுவிஸ் செல்வதற்கான விசா அனுமதிகளை வழங்கியுள்ளதுடன் அது பற்றிய தகவல்களை சிறிலங்கா அரசுக்கு மறைத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
இலங்கையின் வடக்கு மாகாணத்தை சேர்ந்த 57 ஊடகவியலாளர்கள் உட்பட 840 தமிழர்களுக்கே இவ்வாறு தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றும், மூன்று அரசியல்வாதிகளும் இவர்கள் அரசியல் தஞ்சம் பெறுவதற்கான பரிந்துரைகளை செய்துள்ளதாகவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனை தவிர வடக்கின் ஊடகவியலாளர்கள் எனக் கூறப்படும் 6 பேர் பிரித்தானியா சென்று அரசியல் தஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளனர். பிரதான தமிழ் அரசியல்வாதி ஒருவர், இவர்களை பிரித்தானியாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக லண்டனில் உள்ள சிங்கள சட்டத்தரணி ஒருவர் கூறியதாகவும் அந்த ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தை சேர்ந்த இந்த ஊடகவியலாளர்கள் படையினர் தம்மை தாக்கியதாக பொய்யான தகவல்களை முன்வைத்தே அரசியல் தஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அந்த பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த சிங்கள பத்திரிகை இவ்வாறு கூறியுள்ள போதிலும் ஒரு வாரத்திற்கு முன்னர் கூட வடக்கில் இராணுவத்தினரால் தமிழ் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டிருந்ததுடன் அந்த சம்பவம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.