சிங்கள ஆட்சியாளர்கள் பற்றிய தவறான கண்ணோட்டத்தை சர்வதேச அரங்கில் தோற்றுவித்த நீதித்துறை குளறுபடி!
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு எதிராக பௌத்த பிக்குமாரை மையப்படுத்திய பொதுபலசேன உறுப்பினர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஞானசார தேரர் தலைமையில், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. பொதுபலசேன உள்ளிட்ட பௌத்த அமைப்புகள் சிலவற்றை அரசாங்கம் தடை செய்ய வேண்டுமென விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது மற்றும் இஸ்லாமிய மதரஸா பாடசாலைகள் சிலவற்றுக்குத் தடைவிதிப்பது உள்ளிட்ட பல விதப்புரைகள் அறிக்கையில் உள்ளன.
இதனால் அரசாங்கத்தரப்பு, எதிர்த்தரப்பு மற்றும் அரசியல் கட்சிகள், முஸ்லிம் பொது அமைப்புகள் உள்ளிட்ட பலரிடமும் இருந்து எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. ஆனால் பௌத்த பிக்குமாரும் பொதுபலசேனவும் வெளியிடும் எதிர்ப்புகள் ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை உருவாக்கியுள்ளன. உண்மையான குற்றவாளிகளை அரசாங்கம் மூடி மறைப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியிருக்கிறார். அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் இவ்வாறு கூறியதால், மேலும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தவொரு நிலையில் பௌத்த பிக்குமார் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றமை மேலும் புதிய சிக்கலையே தோற்றுவிக்கும்.
அதுவும் ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை குறித்து மூத்த அமைச்சர்கள் சந்தேகம் வெளியிடுவது என்பது இலங்கை நீத்துறை மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் மீதான நம்பிக்கை இன்மையை தோற்றுவிக்கும் அபாயம் உள்ளது
. அதுவும் எழு ஆண்டுகால அரசியல் விடுதலைப் போராட்டத்தை நடத்தி வரும் ஈழத்தமிழ் மக்கள் இலங்கை நீத்துறை மீது நம்பிக்கையில்லை என்றும் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பை ஏற்க முடியாதெனவும் கூறிவரும் நிலையில், சிங்கள மக்களுக்குள்ளேயே இலங்கை நீத்துறை குறித்து இருவேறு கருத்துக்கள் வெளிப்படுகின்றமை சிங்கள ஆட்சியாளர்கள் பற்றிய தவறான கண்ணோட்டத்தை சர்வதேச அரங்கில் தோற்றுவித்திருக்கிறது.
இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்லக்கம் ரஞ்சித் சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக மீண்டும் அறிவித்திருக்கின்றார். ஆகவே இலங்கை நீதித்துறை பற்றிய சந்தேகங்கள் மேலும் வலுக்கும் நிலையில், பௌத்த குருமாரின் சத்தியாக்கிரகப் போராட்டமும் இலங்கையின் மற்றுமொரு முகத்தைக் காண்பிக்கின்றது. ஆனால் இங்கே வேடிக்கை என்னவொன்றால், ஈழத்தமிழர்கள் இன அழிப்பு மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கெல்லாம் சர்வதேச நீதிகோரியபோதெல்லாம், இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறையை நம்ப வேண்டுமெனவும் சர்வதேசத்திடம் தமிழ் மக்கள் நீதிகோருவதால் பயனில்லை என்றும் பேராயர் மல்கம் ரஞ்சித் கூறியிருந்தார்.
ஆனால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்து இன்று சர்வதேச விசாரணையை பேராயர் கோரி நிற்கின்றார். ஆகவே தங்களுக்கு என்றால் ரத்தம் மற்றையவர்களுக்கு என்றால் தக்காளிச் சட்ணி என்பது போல பேராயரின் கதை அமைந்துள்ளது.
ஆகவே இனிமேலாவது ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை குறித்த கோரிக்கைகள் நியாயப்படுகளை பேராயர் புரிந்துகொள்ள வேண்டும்.
பௌத்த பிக்குமார் எப்போதுமே பௌத்த தேசியவாதத்தை முன்நிறுத்தியே செயற்பட்டு வருகின்றனர்.
அத்துடன் சிங்கள ஆட்சியாளர் எவராக இருந்தாலும் பௌத்த தேசியத்துக்கு அல்லது பௌத்த அமைப்பு ஒன்றை தூக்கி எறிந்து பேசினால், அவர்களின் ஆட்சியையே கவிழ்த்து விடும் வல்லமை படைத்தவர்கள் இந்த பௌத்த குருமார்.
எனவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணை குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை அரசாங்கத்துக்கே ஆப்பு வைக்கும் நிலையை தோற்றுவித்திருக்கின்றது.
அதற்காக ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சியடைவதற்கு ஒன்றுமில்லை. ஆனாலும் தர்மம் தலைகாக்கும் அறம் வெல்லும் என்பது மட்டும் வெளிச்சம்.
ஆனால் தமிழ்த்தேசியக் கட்சிகள் இதனைப் புரிந்துகொண்டு ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த நகர்வுகளை மேற்கொள்வதாக இல்லையே.
சிங்கள ஆட்சியாளர்கள் மற்றும் பௌத்தகுருமார் ஆகியோரிடையே ஏற்பட்டுள்ள உள்ளக முரண்பாடுகளைச் சாதகமாகப் பயன்படுத்தி ஈழத்தமிழர் அரசியல் செய்ய வேண்டுமென்பதல்ல.
மாறாக அரசியல் விடுதலைக்கான அங்கீகாரமும் வடக்குக் கிழக்கில் சுயாட்சியோடு கூடிய அதிகாரமும் நியாயமான கோரிக்கை என்பதை அர்த்தபுஷ்டியாக்குவதே வரலாற்றுக் கடமையாகும். அதுதான் உண்மையான ஒன்றிணைந்த இலங்கை.