யாழின் பிரபல பாடசாலையின் செயற்பாடுகள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் மாணவி முறைப்பாடு!
யாழ்ப்பாணம் மானிப்பாயில் உள்ள ஏஞ்சல் தனியார் பாடசாலை நிர்வாகத்தின் செயற்பாட்டில் தனது கற்பதற்கான உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவி ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
குறித்த பாடசாலையில் இருந்து விலகி பிறிதொரு பாடசாலையில் சேர்வதற்கான இடைவிலகல் விண்ணப்பம் தனக்கு உரிய முறையில் தரவில்லை என மாணவி மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று திங்கட்கிழமை முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்பின் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மாணவி மற்றும் அவரின் தாய் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையில்,
“பாடசாலையில் மனரீதியாக பாதிக்கும் வகையில் பல செயற்பாடுகள் இடம்பெற்றதை தனது மகள் தன்னிடம் தெரிவித்ததாகவும், அதன் காரணமாக குறித்த பாடசாலையில் கல்வி கற்பதில் தனது பிள்ளைக்கு விருப்பமின்மை காரணமாக இடைவிலகல் படிவத்தை தருமாறு பாடசாலை அதிபரிடம் கோரிக்கை விடுத்தேன்.
இடைவிலகல் கடிதம் தொடர்பில் சர்ச்சை
கொழும்பில் கல்வியை தொடர போவதாக தெரிவித்த நிலையில் அவர்கள் இடை விலகல் விண்ணப்பத்தை தருவதற்கு இழுத்தடித்தார்கள்.
நான் கொழும்பு செல்ல வேண்டும் எனக்கு இன்று படிவம் தாருங்கள் அல்லது குறித்த பாடசாலைக்கு பொறுப்பாக உள்ள கிறிஸ்தவ பாதிரியாரை சந்திக்க அனுமதிக்குமாறு கேட்டிருந்தேன்.
அதற்கும் அனுமதிக்காத பாடசாலை நிர்வாகம், இடைவிலகல் விண்ணப்பத்தை தராது பிறிதொரு படிவத்தில் எனது பிள்ளையின் ஒழுக்கம் தொடர்பில் ஆரோக்கியமான வார்த்தையை பதிவிடாதது எனக்கு மன வேதனையை தந்தது.
எனது பிள்ளை குறித்த தனியார் பாடசாலையை விட்டு விலகி பிறிதொரு பாடசாலையில் சேரக்கூடாதென பழிவாங்கும் நோக்கில் ஒழுக்கவீனம் தொடர்பில் கருத்தை பதிவிட்டதாக கருதுகிறேன்.
எனது பிள்ளையின் ஒழுக்கம் சரியில்லாமல் இருந்தால் ஏன் இவ்வளவு காலம் எனது பிள்ளையை பாடசாலையில் அனுமதித்திருந்தீர்கள். அல்லது ஒழுக்கம் தொடர்பில் ஏன் எனக்கு கூறவில்லை என கேள்வி எழுப்பினேன் அதற்கு அவர்கள் ஒன்றும் பேசவில்லை.
ஆகவே திட்டமிட்ட முறையில் எனது பிள்ளையை குறித்த தனியார் பாடசாலை பழி வாங்குவதாக நினைக்கிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
பாடசாலை செயற்பாட்டால் மனரீதியாக பாதிப்படைந்த மாணவி
இது தொடர்பில் குறித்த மாணவி கருத்து தெரிவிக்கும் போது,
குறித்த பாடசாலையில் இடம்பெற்ற செயற்பாடுகள் தொடர்பில் தான் மனரீதியாக பாதிப்படைந்த நிலையில் பாடசாலையில் இருந்து விலக முற்பட்டதாக தெரிவித்தார்.
கல்வி அடிப்படை உரிமைகளில் ஒன்றாகக் காணப்படும் நிலையில் விரும்பிய பாடசாலையில் கல்வியை தொடர்வதற்கு வழி ஏற்படுத்தி தர இடைவிலகல் கடிதத்தை உரிய முறையில் பெற்றுத்தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்..
மேலும் ஒழுக்கம் தொடர்பில் பதிவிட்ட காரணத்திற்கான சான்றையும் கூற வேண்டும் எனக்கோரி
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு
பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
