இந்திய - பாகிஸ்தான் பதற்றம் : இலங்கை அரசின் நிலைப்பாடு வெளியானது
இந்திய(india)-பாகிஸ்தான்(pakistan) நெருக்கடியை வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அரசாங்கத்திற்குத் தகவல் அளித்து வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ(nalinda jayatissa) தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (08) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் புவிசார் அரசியல் மோதல்களில் தலையிட மாட்டோம் என்றும் அமைச்சர் கூறினார்.
அணிசேரா அணுகுமுறை பின்பற்றப்படும்
இந்திய-பாகிஸ்தான் நெருக்கடி தொடர்பாக நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் அதே வேளையில், அணிசேரா அணுகுமுறை பின்பற்றப்படும் என்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இருப்பினும், பயங்கரவாதம் எந்த வகையிலும் மன்னிக்கப்படவோ அல்லது ஆதரிக்கப்படவோ கூடாது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். எனவே, பயங்கரவாதத்தைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் எந்த நேரத்திலும் சாத்தியமான ஆதரவு வழங்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
பிராந்திய அமைதி இலங்கைக்கு முக்கியமானது
பிராந்திய அமைதி இலங்கைக்கு முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எந்தவொரு நாட்டிற்கும் எதிராக செயல்பட இலங்கையின் பிரதேசத்தையோ அல்லது நீர்நிலைகளையோ ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்ற கொள்கையை அரசாங்கம் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
