தேசிய கால்பந்தாட்ட அணி வீரர் டக்சன் பியூஸ்லஸின் உடல் பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீரோடு நல்லடக்கம்! (படங்கள்)
இலங்கை தேசிய காற்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் இன்று மாலை 05 மணியளவில் மன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மாலைதீவில் கடந்த மாதம் 26 ஆம் திகதி மரணமடைந்த மன்னார் பனங்கட்டுகொட்டு கிராமத்தைச் சேர்ந்த இலங்கை தேசிய காற்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடன் கடந்த 03 ஆம் திகதி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு அன்றைய தினம் பூதவுடல் அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்து கையளிக்கப்பட்டது.
பூதவுடல் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் உடல் யாழ்ப்பாணத்துக்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் பனங்கட்டுக்கொட்டில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு பூதவுடல் எடுத்து வரப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்றைய தினம் மதியம் 01 மணியளவில் இறுதி அஞ்சலி நிகழ்வு அன்னாரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மதத்தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், விளையாட்டுக்கழக வீரர்கள், தேசிய காற்பந்தாட்ட அணி பிரதிநிதிகள், இளைஞர் கழக அங்கத்தவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மாலை 2.45 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இருந்து பூதவுடல் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து பூதவுடல் ஊர்வலமாக மன்னார் பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு மாலை 05 மணியளவில் பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதி நல்லடக்கத்தையொட்டி இன்றைய தினம் மன்னார் நகர பகுதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு துக்க நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.














