முடிவடைந்தது தேர்தல்! வாக்குகள் எண்ணும் நடவடிக்கை ஆரம்பம் - சிறிலங்காவின் புதிய அதிபர் யார்... சற்று நேரத்தில் முடிவு(நேரலை)
புதிய இணைப்பு
சிறிலங்காவின் இடைக்கால அதிபருக்கான தேர்தலுக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளதுடன், வாக்களிப்பில் கலந்து கொள்ளாதவர்களின் பெயர்கள் மீண்டும் ஒருமுறை அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் வாக்குகள் எண்ணும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சற்று நேரத்தில் முடிவு அறிவிக்கப்படவுள்ளது.
மூன்றாம் இணைப்பு
சிறிலங்காவின் புதிய அதிபர் தெரிவுக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு தற்பொழுது நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இரண்டாம் இணைப்பு
இலங்கையின் புதிய அதிபரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
பதில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சரான டளஸ் அழகப்பெரும, ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
ரகசிய வாக்கெடுப்பின் ஊடாகவே இந்தத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
முதலாவதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தனது வாக்கினை பதிவு செய்துள்ளதோடு, அடுத்ததாக பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் வாக்கினை பதிவு செய்துள்ளார். தொடர்ந்து பேர் குறிப்பிட்டு அழைக்கப்படும் உறுப்பினர்கள் தமது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
அத்துடன் இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்விற்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச சமூகமளித்துள்ளார்
முதலாம் இணைப்பு
சிறிலங்காவின் புதிய அதிபர் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில் சற்றுமுன்னர் நாடாளுமன்றம் கூடியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தொடர்ந்து நாட்டுக்கான புதிய அதிபர் இன்று நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளார்.
கடந்த ஜூலை 9 ஆம் திகதி வெடித்த மக்கள் புரட்சியை தொடர்ந்து ஜூலை 14 திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கோட்டாபய ராஜபக்ச தனது அதிபர் பதவியில் இருந்து விலகியிருந்தார். இதனை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோட்டாபயவின் கடமைகளை பொறுப்பேற்க பதில் அதிபராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் புதிய அதிபர் தெரிவு செய்யப்படுவார் என சபாநாயர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னர் அறிவித்திருந்தார்.
இதன்படி, புதிய அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுக்குள் நேற்று நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான டலஸ் அழகப்பெருமவின் பெயரை முன்மொழிந்தார். அதனை அமைச்சர் ஜி.எல் பீரிஸ் வழிமொழிந்தார்.
இதேவேளை, அமைச்சர் தினேஸ் குணவர்தன பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பெயரை முன்மொழிய, அதனை நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார வழிமொழிந்திருந்தார். மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் முன்மொழிந்ததுடன், அதனை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய வழிமொழிந்தார்.