நாடாளுமன்ற வளாகத்திற்குள் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்- பறிக்கப்பட்டது ஊடகவியலாளர்களின் தொலைபேசி!
நாடாளுமன்றத்திற்கு வந்த பார்வையாளர்கள் சிலர் தமது கையடக்க தொலைபேசிகளில் நாடாளுமன்றத்தை ஒளிப்பதிவு செய்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண மற்றும் பிரேமநாத் சீ. தொலவத்த ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இது சம்பந்தமாக தேடி அறியுமாறு அவர்கள் சபாநாயகருக்கு அறிவித்துள்ளனர். நாடாளுமன்ற வளாகத்திற்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் அல்லாத சிலர் வந்து தமது தொலைபேசி மூலம் ஒளிப்பதிவு செய்வதை காணக் கூடியதாக இருந்தது என சன்ன ஜயசுமண சபாநாயகருக்குத் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் குழுக் கூட்டம் நடந்த குழு அறைக்கு அருகில் வந்து அதனையும் ஒளிப்பதிவு செய்தனர். இதனால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு கருதி அவர்கள் யார் என்பதை உடனடியாக தேடி அறிந்து, அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோருயுள்ளார்.
இந்த பிரச்சினை காரணமாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவதற்கு அஞ்சுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரேம்நாதன் சீ தொலவத்த பல பிரச்சினைகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர். ஊடகவியலாளர்களுக்கு நாடாளுமன்ற அவை தொடர்பான செய்திகளை வெளியில் கொண்டு சென்று வெளியிடும் சந்தர்ப்பம் உள்ளது.
நாங்கள் ஆளும் கட்சியின் குழுக் கூட்டம் முடிந்து வெளியில் வரும் போது சிறிய தொலைபேசி மூலம் வீடியோ எடுத்தனர். சாதாரணமாக பெரிய கெமராக்களில் எடுத்தால் பரவாயில்லை.
ஆனால் இவ்வாறு சம்மந்தம் அல்லாத நபர்கள் நாடாளுமன்றத்தில் அனைத்து இடங்களிலும் இவ்வாறு வீடியோ பதிவு செய்ய முடியுமா என்பதை சபாநாயகரேதேடி அறியுங்கள் எனவும் தெரிவித்தள்ளார்.
உயிர் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது ஜனநாயக கடமையை நிறைவேற்ற நாங்கள் இங்கு வந்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். அவர் அவ்வாறு தெரிவித்த போது சபாநாயகர், நாங்கள் அதனைத் தேடிப்பார்ககின்றோம் என பதிலளித்துள்ளார்.
இதனிடையே நாடாளுமன்றத்திற்குள் செய்தியளிப்பில் ஈடுபட்டிருந்த இரண்டு செய்தியாளர்களின் கையடக்க தொலைபேசிகளை சிலர் பலவந்தமாக பெற்றுக்கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்ற செய்தியாளர்கள் சங்கத்தின் தலைவர், அதேபோல் சுயாதீன செய்தியாளர் ஒருவர் நாடாளுமன்றத்தில் இன்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். தமது ஐ போன்களை பயன்படுத்தி வீடியோ பதிவு செய்யவும் குரல் பதிவுகளை எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தின் பின்னர் இவர்களின் தொலைபேசிகள் பறிக்கப்பட்டுள்ளன. பறித்தவர்களின் பெயர்களை கூற விரும்பவில்லை. நான் இது குறித்து உங்களது கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். தொலைபேசிகளை சம்பந்தப்பட்டவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுங்கள் என சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.