இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வு இல்லாத மிக மோசமான உரை- கோட்டாபயவின் கொள்கை விளக்க உரையை விமர்சிக்கும் கூட்டமைப்பு!
சிறிலங்காவின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை இன்று ஆரம்பித்து வைத்த அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை ஆற்றினார்.
இதன்போது அவர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து எந்த காத்திரமான விடயத்தையும் முன்வைக்கவில்லை என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
அதேவேளை கோட்டாபய ஆற்றிய உரை, “மிக மோசமான உரை” என்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து எந்த காத்திரமான விடயத்தையும் முன்வைக்காது, அரசியல் கொள்கைகளை ஒதுக்கி வைத்து விட்டு அரசாங்கத்தின் வாழ்வாதார செயற்பாடுகளில் ஒத்துழைக்கவேண்டும் என்று வடக்கு கிழக்கு பிரதிநிதிகளுக்கு அவர் அழைப்பு விடுத்ததில் எவ்வித யதார்த்தமும் இல்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைக்காகவே மக்கள் அதற்கு வாக்களித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர்.
எனவே, அந்த கொள்கைகளை விட்டுவிட்டு எவ்வாறு செயற்படமுடியும் என்றும் சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் இலங்கையில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லையென்ற அடிப்படையிலேயே கோட்டாபயவின் உரை அமைந்திருந்ததாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.