ஆளும்தரப்பின் முடிவுக்கு மாறாக எதிர்த்தரப்பினருக்கு சார்பாக நடந்துகொண்ட கெஹலிய!
சிறிலங்கா நாடாளுமன்ற அமர்வு இன்று மதிய நேர உணவுக்கு இடை நிறுத்தாது இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு தொடர்ச்சியாக அமர்வை நடத்துவதற்கு எதிர்த் தரப்பினரே கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சியின் கோரிக்கைக்கு அரசாங்கத் தரப்பும் இணங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நாடாளுமன்றில் மதிய உணவிற்கு நேரம் தேவையில்லை என்றும், அமர்வை தொடர வேண்டும் என்றும் எதிர்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
எனினும் அரசாங்க கட்சியினர் இதற்கு உடன்படவில்லை. இதன்போது பகல் உணவைத் தவிர்த்து நாடாளுமன்ற விவாதத்தை நடத்திச் செல்வது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று எதிர்கட்சியினர் கோரினர்.
எனினும் நாடாளுமன்றில் அரசாங்கக் கட்சியினர் குறைவாக இருந்தமையால், ஆளும் கட்சியின் அவை தலைவர் தினேஸ் குணவர்த்தன அதற்கு உடன்படவில்லை. இந்தநிலையில் அரசாங்கத்தின் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, அரசாங்க கட்சியினரின் கருத்துக்கு புறம்பாக தமது கருத்தை வெளியிட்டார்.
நாடாளுமன்ற அமர்வுகளை பகல் உணவிற்கு இடைநிறுத்தாமல் தொடரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து தினேஸ் குணவர்த்தனவும் எதிர்கட்சியின் கோரிக்கைக்கு இணக்கம் வெளியிட்டார்.
இதனையடுத்து அரசாங்க கட்சியினருக்கும், எதிர்கட்சியின் கோரிக்கைக்கு இணங்கி பகல் உணவு இடைவேளை இன்றி அமர்வுகளை நடத்தி செல்லும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
