இது எனது தோல்வியல்ல - தைரியமான வழிகாட்டலே; வஞ்சனையான அரசியல் கலாசாரத்திற்கு முடிவு வேண்டும்!
சிறிலங்காவின் அதிபர் பதவியை ஒரு ஆபரணமாகவும், கௌரவமாகவும், சொத்தாகவும் கருதி நாங்கள் ஒரு அணியாக இந்த அதிபர் பதவிக்கான போட்டியில் கலந்துகொள்ளவில்லை என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மேலும் தேசிய நிகழ்ச்சி நிரலுக்கு பதிலாக, கட்சி நபர் என்ற நிகழ்ச்சி நிரலை மையப்படுத்தி, அரசியலமைப்பிலும் அரசியலமைப்புத் திருத்தங்களையும் செய்து, மக்களின் இறையாண்மையை காட்டிக்கொடுத்து, சுதந்திரம் பெற்ற நாள் முதல் நாம் அனுபவித்த வஞ்சனையான அரசியல் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை முன்நிறுத்தியே போட்டியிட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அதிபர் பதவிக்கு போட்டியிட்ட அவர், வாக்கெடுப்பு முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அவையில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பாக மக்கள் மத்தியில், இல்லாது போயுள்ள நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இலக்கங்களில் அடைந்த தோல்வி ஒரு தோல்வியல்ல

இதேவேளை வாக்குகளில், இலக்கங்களில் அடைந்த தோல்வியை நான் தோல்வியாக கருதவில்லை. தைரியமான வழிக்காட்டலாக கருதுகிறேன். எனக்கு உதவிய, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
அதேபோல் வரலாற்றில் முதலாவது இணக்கப்பாட்டு அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாக இருந்தது.
செயற்பாட்டு ரீதியான இணக்கப்பாட்டு அரசாங்கத்தை அமைப்பது நோக்கமாக இருந்தது. அதுதான் எமது அப்பிராயமாக இருந்தது. இதனால், தோல்வியடைந்தாலும் அந்த இணக்கப்பாட்டை மதிக்கும் பெரும்பாலான மக்களின் எதிர்ப்பார்ப்பு மீறப்பட்டதாக நாங்கள் நம்ப மாட்டோம்.
அதேபோல் பிராந்தியத்தின் மிகப் பழைய ஜனநாயக நாடு என்ற வகையில் முடிவு எதுவாக இருந்தாலும் இந்த இணக்கப்பாடு முழு உலகத்திற்கும் பெறுமதியான முன்னுதாரணத்தை வழங்கியுள்ளது.
நாட்டுக்கு எச்சரிக்கைக்குப் பதிலாக முன்னுதாரணத்தையே காட்டியுள்ளது

இதற்கு வழியை ஏற்படுத்த பலர் அர்ப்பணிப்புகளை செய்தனர். குறிப்பாக எச்சரிக்கைக்கு பதிலாக முன்னுதாரணம் நாட்டுக்கு காண்பித்து, தனிப்பட்ட அபிலாஷைகளை ஒதுக்கி வைத்து விட்டு, என்னை அதிபர் பதவிக்கு பரிந்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அதனை ஆமோதித்து வலுசேர்த்த பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் உட்பட பல கட்சிகள், இந்த நாடாளுமன்றத்தில் கட்சிகள் என்று எடுத்துக்கொண்டால், பெரும்பான்மையான கட்சிகள் அர்ப்பணிப்புகளை செய்தன.
இதுவரை நாட்டில் பிளவுபட்டிருந்த, பிளவுபடுத்த முயற்சித்த, இன, மத மற்றும் கட்சிகள் எந்த பிளவுகளும் இன்றி ஒன்றிணைந்து செயற்பட்டோம். புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதேவேளை இந்த நோக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நாடாளுமன்றத்தில் உள்ள அனைவருக்கும் எனது தனிப்பட்ட கௌரவத்தையும் நாட்டில் வாழும் பல மில்லியன் மக்களின் கௌரவத்தையும் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியது போல் சுதந்திரத்திற்கு பின்னர் எமது தாய் நாடு மிக மோசமான காலகட்டத்தை கடந்து வருகிறது. முன்னேறிய ஜனநாயகத்தை நாடாளுமன்றத்தில் வெளிக்காட்டி ரணில் விக்ரமசிங்கவும் எனது நண்பர் அனுர குமார திஸாநாயக்கவும் போட்டியிட்டனர்.
அனைவருக்கும் சகோதரத்துவத்துடன் கரம் நீட்ட எதிர்பார்ப்பு

இந்த சந்தர்ப்பத்தில் புதிய அதிபருக்கும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எமது கொள்கைகளைப் போலவே அரசியல் கொள்கைக்காகவும் வாக்குகளை வழங்கிய அனைவருக்கும் எனது சகோதரத்துவத்தின் கரங்களை நீட்ட எதிர்பார்க்கின்றேன்.
ஆரோக்கியமாக உள்ள நாட்டுக்கு மீண்டும் எழ முடியும். நோய்வாய்ப்பட்ட நாட்டுக்கு மீண்டும் எழ முடியாது. இதற்கு எமது அனைவரது ஒத்துழைப்பும் அவசியம். நாம் எப்போதும் இந்த தியவன்ன தீவில் இருக்கும் 225 குடும்பங்களை பற்றி மாத்திரமே சிந்தித்தோம்.
தியவன்னவுக்குள் மட்டும் சிந்திக்காது வெளியேயும் சிந்திப்போம்

நாங்கள் தியவன்னவுக்கு வெளியில் இருக்கும் 58 லட்சம் குடும்பங்கள் பற்றியும் சிந்திப்போம். இதனால், ஒன்றாக ஒன்றிணைய வேண்டும். இந்திய பெருங்கடலின் மத்தியில் இருக்கும் இந்த தீவில் வாழும் 22 மில்லியன் மக்களும் எம்முடன் ஒன்றிணைவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை அற்று போயுள்ள சந்தர்ப்பத்தில், நாம் அரசியல் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இல்லாமல் போயுள்ள நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்.
அது இலக்கங்களில் செய்யக்கூடிய வேலையல்ல. அது சிறந்த அரசியல் பயிற்சியில் செய்ய வேண்டியது எனவும் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.