கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்காவைச் சேர்ந்த திருமதி உலக அழகி தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்!
கைது செய்யப்பட்ட திருமதி உலக அழகி கரோலின் ஜூரி மற்றும் சுலா பத்மேந்திர இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கருவாத்தோட்டம் பொலிஸாரால் அவர்கள் இருவரும் இன்று மதியம் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலுயே தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
திருமதி உலக அழகியாக 2020 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்காவின் கரோலின் ஜூரி மற்றும் முன்னாள் அழகி சூலா பத்மேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொழும்பில் இடம்பெற்ற திருமதி அழகி போட்டியின் இறுதி நிகழ்வின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
அண்மையில் திருமதி இலங்கை அழகிப் போட்டியில் கிரீடத்தை தன் வசமாக்கிய புஷ்பிகா சந்தமாலி சில்வா என்பவரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டது.
திருமதி அழகியாக தாம் தெரிவாகி மகுடம் சூட்டப்பட்ட போது அதனை பறித்தெடுத்து மற்றுமொருவருக்கு சூட்டப்பட்டதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
கிரீடத்தை தலையிலிருந்து பறித்தெடுத்த போது காயம் ஏற்பட்டதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பலவந்தமான முறையில் தாம் நடத்தப்பட்டதாகவும் புஷ்பிகா சந்தமாலி சில்வா தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொண்ட கருவாத்தோட்டம் காவல்துறையினர் திருமதி உலக அழகியான ஸ்ரீலங்காவின் கரோலின் ஜூரி மற்றும் முன்னாள் அழகி சூலா பத்மேந்திரன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.