சிறிலங்கா அதிபரின் அதிகார குறைப்பு தொடர்பில் நீதி அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
சிறிலங்கா அதிபரின் நிறைவேற்று அதிகாரங்களை வலுப்படுத்துவதற்காக அன்றைய அதிபர் கோட்டாபய ராஜபக்சவினால் கொண்டுவரப்பட்ட சரத்துகளை மாற்றுவதற்காகவே அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டத்தில் சில திருத்தங்கள் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“அதிபரின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகவே இவ்வாறான சரத்துகள் அமைந்திருப்பதாக பொதுமக்கள் கருதுவதால், அப்போதைய அதிபரால் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன.
குறைகளை நிவர்த்தி செய்வதற்கான பிரேரணை
எனவே சில குறைபாடுகளை நிவர்த்தி செய்த பின்னர் அவ்வாறான சரத்துகளை நீக்கி அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீள நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டது.
மேலும், புதிய பிரேரணையானது 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அப்பாற்பட்டதாக அமையும்.
நாட்டில் இடம்பெற்ற போராட்டங்கள் காரணமாக அரசாங்கம், அமைச்சரவை, பிரதமர் மற்றும் அதிபர் ஆகியோர் மாற்றப்பட்டதாகவும், தற்போது நாடு அரசியலமைப்பு விதிகளுக்கு உட்பட்டே செயற்பட வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.