ரணில் சுமந்திரன் தினேஸ் இரகசிய மந்திராலோசனை - கசிந்தது தகவல்!
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேரடிக் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்தரையாடல் நேற்று மாலை சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு அதிபர் செயலகத்திலோ அல்லது பிரதமர் அலுவலகத்திலோ நடக்கவில்லை. மூன்றாம் தரப்புக்குத் தெரியாமல் கொழும்பில் பொதுவான இடம் ஒன்றில் இந்தச் சந்திப்பு இடம் பெற்றது என்றும் தகவல் கசிந்துள்ளது.
ரணில் தினேஸ் சுமந்திரன் சந்திப்பு

இதன் போது, முதலில் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு ஆரம்பமானது. பிரதமர் தினேஷ் குணவர்த்தன சற்று தாமதமாகவே சந்திப்பில் இணைந்து கொண்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
எதிர்வரும் 13ஆம் திகதி கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் நடத்துவதற்கு ரணில் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தேசிய பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுக்கும் வழிவகைகள் குறித்து, மூவரும் மந்திராலோசனை நடத்தினர் எனத் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தை எங்கிருந்து ஆரம்பிப்பது, எப்படி முன் நகர்த்துவது என்பவை குறித்தே மூவரும் ஆலோசித்தனர் எனவும் தெரியவருகின்றது. அதேவேளை தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான உத்தேச பேச்சுக்கள் தொடர்பில் தமிழர் தரப்பின் ஒன்றுபட்ட கருத்து நிலைப்பாட்டையும் நேற்றைய சந்திப்பில் சுமந்திரன், அதிபர் மற்றம் பிரதமருக்கும் எடுத்துரைத்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமாதான முயற்சிக்கு எதிரான கருத்துக்கள்

மேலும் அரசமைப்பு பேரவைக்கு ஏழாவது உறுப்பினரை நியமிப்பது தொடர்பில் பேரினவாதத் தரப்புக்கள் நேற்றைய தினம் நாடாளுமன்றில் எப்படி நடந்து கொண்டன என்பதையும் சுமந்திரன் இருவருக்கும் சுட்டிக்காட்டியிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், எதிர்வரும் 13ஆம் திகதி பேச்சுக்கள் ஆரம்பமாகும் போது, சமாதான முயற்சிகளுக்கு எதிரான தீவிர பேரினவாதக் கருத்துக்கள் இத்தகைய சக்திகளால் நிச்சயம் முன்வைக்கப்படும், அவற்றைப் புறம் ஒதுக்கிவிட்டு, முன்நகரும் அரசியல் தற்துணிவும் திடசங்கற்பமும் அதிபருக்கும் அரசுக்கும் இருந்தால் மட்டுமே இந்த விடயத்தை ஆக்கபூர்வமாக முன்னெடுக்க முடியும் என்று சுமந்திரன் நேரடியாகவே தெரிவித்தார்.
ஒருபுறம் பேச்சு நடக்கும் அதேசமயம், மறுபுறத்தில் மாகாண சபைத் தேர்தலைக் காலதாமதப்படுத்தாமல் உடனடியாக நடத்தி, அரசமைப்பு ஏற்பாடுகளில் ஏற்கனவே உள்ளவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுத்தால் தான், இந்தச் சமரச முயற்சியில் தமிழ் மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் நம்பிக்கை பிறக்கும் எனவும் சுட்டிக்காட்டியமையை ரணிலும் ஆமோதிக்கும் விதத்தில் செவிமடுத்தார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சுமந்திரன் சம்பந்தன் சந்திப்பு

இறுதியில், உத்தேசப் பேச்சு முயற்சியை விரைந்து முன்நகர்த்துவதற்கு எங்கிருந்து அதனை ஆரம்பிப்பது என்பது தொடர்பில் அவர்கள் பேசி சில முடிவுகளை எட்டினர் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.
எனினும் எதிர்வரும் 13 ஆம் திகதி தாம் கூட்டியுள்ள சர்வகட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை உள்வாங்கி, அடுத்த கட்ட நகர்வை உறுதி செய்யலாம் என்று ரணில் விக்ரமசிங்க சந்திப்பின் முடிவில் தெரிவித்ததாகவும்தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பேச்சுகளின் விபரத்தை இன்று சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு நேரில் சென்று விளக்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.