ஆரம்பமானது ரணிலின் சாணக்கிய நகர்வு- வசப்படுத்திக்கொண்ட முக்கிய அமைச்சு!
சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில், முக்கிய அமைச்சை, பிரதமர் ரணில் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் நிதி அமைச்சை பிரதமர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் புதிய அமைச்சரவை 18 அமைச்சர்களைக் கொண்டிருக்கும் எனவும் பொதுஜன பெரமுனவுக்கு எட்டு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள் பலர் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களுக்கு ஐந்து அமைச்சுப் பதவிகள் ஒதுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மீதமாகவுள்ள அமைச்சுப் பதவிகள் அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்படும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என பிரதமர் அலுவலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் இன்று காலை 9.00 மணிக்கு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அதன் பின்னர் விமல் வீரவன்ச மற்றும் அரசாங்கத்தின் ஏனைய பத்து சுயாதீன உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளளது.
நேற்று விமல் மற்றும் அவரது தரப்பினருக்கு கலந்துரையாடலுக்கான நேரம் வழங்கப்பட்டது. எனினும் வேறு திகதியை வழங்குமாறு பிரதமர் அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், அண்மையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நான்கு அமைச்சர்களுக்கு மேலதிகமாக ஏனைய அமைச்சர்கள் இன்னும் ஓரிரு தினத்திற்கு பின்னர் நியமிக்கப்படுவார்கள் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன் போது நிதியமைச்சராக ரணில் பதவியேற்கவுள்ளதோடு, கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்தவின் பெயர் கல்வி அமைச்சர் பதவிக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.