வடக்கு கிழக்கு மக்கள் எதிர்பார்க்கும் அதிகாரப் பகிர்வு என்பது ரணில் ஊடாகவே முன்னெடுக்க முடியும்!
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மக்கள் எதிர்பார்க்கும் அதிகாரப் பகிர்வு என்ற விடயத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடாக இலகுவாக முன்னெடுக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நாட்டின் நெருக்கடிகளை தீர்ப்பதற்காக அமைக்கப்படும் குழுக்களில் அங்கம் வகித்து மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பொருளாதார மீட்சியை முன்னிறுத்தி தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எவ்வித பதவிகளையும் பெறாமல், நாடாளுமன்றத்தின் ஊடாக ஆதரவு வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இவ்வாறான நிலையில் தற்போது, தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவை வழங்கும் என்பது இதன் அர்த்தம் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் நலனுக்காகவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கும் வகையிலும் அரசாங்கம் முன்வைக்கப்படும் திட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவினை வழங்கும் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க முன்பு பிரதமராக இருந்த போதும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அவருடன் நீண்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளமையினால் அவர் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நன்கு அறிந்திருப்பர் என்றும் கூறியுள்ளார்.
மேலும் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்பார்க்கும் அதிகாரப் பகிர்வு என்கிற விடயம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடாக இலகுவாக முன்னெடுக்க முடியும் என்றும் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எனவே பலமான அரசாங்கம் ஒன்று கட்டியெழுப்பப்பட்ட பின்னர் அவருடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தி தீர்வினை காண்போம் என்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் ஆதரவு கோரி பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.