பிரதமர் பதவி தொடர்பில் சரத் பொன்சேகாவின் அதிரடிப் பதில்!
பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும், கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் திட்டவட்டமாக ஏற்கப்போவதில்லையெனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கின் பதிவிலேயே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
தற்போதைய அரச தலைவரின் கீழுள்ள அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயாராக இல்லை என அந்த பதிவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அமைதியான, வன்முறையற்ற உள்நாட்டுப் போராட்டத்தின் மூலம் முழு இலங்கை தேசத்தின் முக்கிய கோரிக்கைகளில் நானும் நிபந்தனையின்றி நிற்கின்றேன்.
அதுமட்டுமன்றி காலி முகத்திடல் போராட்ட மைதானத்தில் இருந்து நாட்டிற்காகவும், மக்களுக்காகவும், தேசத்தின் பேரப்பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் குரல் கொடுக்கும் மக்களின் கோரிக்கைகளை நான் மிகவும் உணர்கின்றேன்.
ஆரம்பத்தில் இருந்தே, போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் துணிச்சலான போராளிக் குடிமக்களின் குழந்தைகளுக்கு நான் முழு மனதுடன் ஆசீர்வதித்தேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பிரதமர் பதவி தொடர்பில் சரத் பொன்சேகாவுடன் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
