அரசின் இனவாத செயற்பாடுகளால் இலங்கை நிலை குலைவு! சாந்தி சிறிஸ்கந்தராசா
தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் இனவாத செயற்பாடுகளினால் இலங்கை தற்போது நிலைகுலைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா (Shanthi Sriskantharajah) தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - ஒதியமலைப் படுகொலையில் 37 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வில் வைத்து அவர் இதனை கூறினார்.
முல்லைத்தீவு - ஒதியமலை கிராமத்தில் கடந்த 1984 டிசம்பர் 2 ஆம் திகதி அதிகாலை புகுந்த சிறிலங்கா இராணுவத்தினர் அக்கிராமத்தின் வீடுகளில் இருந்த ஆண்களை மாத்திரம் அழைத்துச் சென்று படுகெகாலை செய்திருந்தனர்.
இந்த சம்பவத்தில் 27 ஆண்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், மேலும் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட 5 ஆண்கள் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் ஒதியமலைப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடத்தில் இன்று இடம்பெற்றது.
படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு துாபியில் மலர் துாவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆத்மா சாந்தி பிராத்தனைகள் இடம்பெற்று அன்னதானமும் வழங்கப்பட்டது.
நினைவு நாள் நிகழ்வில் உயிரிழந்தவர்களது உறவுகள் மக்கள் பிரதிநிதிகளான துரைராசா ரவிகரன் மற்றும் சாந்தி சிறிஸ்கந்தராசா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.