ரணில் ஒரு தோல்வியடைந்த தலைவர்- ஐக்கிய மக்கள் சக்தி விமர்சனம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க கடந்த 27 ஆண்டுகளாக இருக்கின்றார்.
அப்படி இல்லாது அவர் புதியவர்களுக்கு வாய்ப்பை வழங்கி இருந்தால் கடந்த பொதுத் தேர்தலில் ஒரு நாடாளுமன்ற ஆசனத்தைக் கூடப் பெற முடியாத அளவுக்கு மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியை நிராகரித்திருக்க மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, தென்னிலங்கை இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஐக்கிய தேசியக் கட்சியை முற்றாக பலவீனமான நிலைக்கு கொண்டு சென்றுள்ள அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால், கட்சியில் இளைஞர்களை கொண்ட மூன்றாவது அணியை உருவாக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை அரசியல் அமைப்பில் வேறு ஒரு தலைவராக இருந்திருந்தால், அந்த காலத்திலேயே இளையவர்களை கொண்ட முதல், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது அணிகளை உருவாக்கி இருப்பார்.
இவ்வாறு செய்யும் இயலுமை ரணில் விக்ரமசிங்கவுக்கு இருக்கவில்லை. அவர் தோல்வியடைந்த தலைவர். இளைய தலைமுறையினரை கொண்ட இரண்டாம், மூன்றாவது அணிகளை உருவாக்கி இருந்தால், ஐக்கிய தேசியக் கட்சி இந்தளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்காது.
ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அவர் கூறுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க காலத்திற்கு காலம் பல்வேறு கதைகளை கூறக் கூடிய திறமைசாலி எனவும் அவர் கூறிய பல கதைகளை அவர் நடைமுறைப்படுத்தியதில்லை எனவும் அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.