எரிபொருள் நிலையத்தில் காவல்துறையினரின் அத்துமீறிய செயற்பாடு - இருவர் கைது!
வவுனியாவில் அரச ஊழியர்களிற்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து நகரசபை உறுப்பினர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரச ஊழியர்களிற்கும் காவல்துறைியனருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக நகரசபை உறுப்பினர் உட்பட மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வவுனியாவில் இருவர் கைது
வவுனியா மன்னார் வீதி நெளுக்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்காக கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக இரவு பகல் பாராது அரச உத்தியோகத்தர்கள் ஒரு வரிசையிலும், பொதுமக்கள் ஒரு வரிசையிலும் காத்திருந்தனர்.
இந்நிலையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட காவல்துறையினர் தமக்கான புதிய வரிசையினை உருவாக்கி எரிபொருளினை பெறும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
மேலும் காவல்துறையினர் தங்களிற்கான எரிபொருளினை பெற்ற பின்னரே அரச ஊழியர்கள் பெற முடியும் என தெரிவித்தமையால் அரச ஊழியர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினரிடம் கேள்வி கேட்ட நகரபை உறுப்பினர் பாரி, மற்றும் அரச உத்தியோகத்தர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
எரிபொருள் வரிசையை குழப்பிய காவல்துறை
இதனால் அப்பகுதியில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டதுடன் இரு காவல்துறையினருக்கு இரு அரச ஊழியர்கள் என்ற ரீதியில் எரிபொருளினை வழங்க காவல்துறையினர் உடன்பட்டதன் பின்னரே குறித்த குழப்ப நிலை முடிவுக்கு வந்திருந்தது.
இதேவேளை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வநியோகிக்கும் போது காவல்துறைியனர் அதிகளவில் விசேட முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளினை பெற்றுச்செல்வதனால் தங்களிற்கான எரிபொருளினை பெறுவதற்கு பல நாட்களிற்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.