கசிந்த விசேட வர்த்தமானி...! வாகன இறக்குமதியில் பாரிய ஊழல் குற்றச்சாட்டு
அண்மையில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வாகன இறக்குமதி வரி தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு, ஒரு சில வர்த்தகர்களுக்கு முன்கூட்டியே கசிந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் நிரோஷன் பாதுக்க இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விசேட வர்த்தமானி
மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 15 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார்.
அதில் வாகன இறக்குமதிக்கு 50 வீதம் மேலதிக வரி விதிக்கப்பட்டது.
ஆனால், அன்று அல்லது அதற்கு முன்பாக கடன் கடிதங்கள் (LC) திறக்கப்பட்ட வாகனங்களுக்கு இந்த வரி விலக்கு அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் எப்படி சில முக்கிய வர்த்தகர்களுக்கு முன்னரே தெரிந்தது ?
வர்த்தமானி வெளியாவதற்கு முன்பே இரு முக்கிய வர்த்தகர்கள் 4,000 புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்காகக் கடன் கடிதங்களை (LC) பழைய வரி விகிதத்திலேயே திறந்துள்ளனர்.
கொடுக்கல் வாங்கல்
இதில் ஒருவர் 3,500 வாகனங்களுக்கும் மற்றொருவர் 500 வாகனங்களுக்கும் இவ்வாறு அனுமதி பெற்றுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (15) ஒரே நாளில் 40 பில்லியன் ரூபா பெறுமதியான கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாகவே அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு 323 ரூபாவிலிருந்து 334 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த முறையற்ற கொடுக்கல் வாங்கல்களால் அரசாங்கத்திற்கு 20 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது ஒரு சாதாரண விடயமல்ல இது ஒரு பாரிய மோசடி.
மத்திய வங்கி ஏன் இந்த கொடுக்கல் வாங்கல்களைக் கண்காணிக்கவில்லை? இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |