வியட்நாமில் இலங்கை அகதிகள் எடுத்த விபரீத முடிவு
வியட்நாமில் அகதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களில் இருவர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையைச் சேர்ந்த 303 பேர் சட்டவிரோதமாக கப்பல் மூலம் கனடா செல்ல முயன்ற போது, கப்பல் பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்தனர்.
அவர்களை ஜப்பானிய கப்பல் அதிகாரிகள் மீட்டு வியட்நாமில் கரை சேர்த்தனர்.
இலங்கை அகதிகள் எதிர்ப்பு

இந்த நிலையில் அவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை வியட்நாம் அதிகாரிகள் மேற்கொண்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு இலங்கையர்கள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.
அவர்கள் இருவரும் தற்போது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் ஆபத்தான கட்டத்தில் இருக்கின்றார் என்று கூறப்படுகிறது.
செத்தாலும் இலங்கை போக மாட்டோம்
இவ்வாறான நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் - "செத்தாலும் இலங்கை போக மாட்டோம்" என்றும் தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும், தம்மைக் காப்பாற்றி குடியேற்ற நாடொன்று அடைக்கலம் கொடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும் தாங்கள் தொடர்ந்தும் அச்சத்தில் இருப்பதாகவும், இலங்கையில் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வாழ முடியாத சூழல் உள்ளது எனவும், அங்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.