ஈழத்தமிழ் குடும்பத்திற்கு அவுஸ்ரேலிய அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு
நீண்ட பல போராட்டம்
நீண்ட பல போராட்டத்தின் பின்னர் அவுஸ்ரேலியாவில் நிரந்தரமாக தங்குவதற்கான விசாவை ஈழத்தமிழ் குடும்பம் பெற்றுள்ளது.
பிரியா-நடேஸ் குடும்பத்திற்கே இந்த நிரந்தர விசா கிடைத்துள்ளது.
குடிவரவு, குடியுரிமை மற்றும் பல்கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் என்ற முறையில், தனக்கு முன் இருந்த அனைத்து தெரிவுகளையும் கவனமாகப் பரிசீலித்ததன் அடிப்படையில், குடிவரவுச் சட்டம் 1958 இன் பிரிவு 195A இன் கீழ் தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இக்குடும்பம் அவுஸ்ரேலியாவில் நிரந்தரமாக வாழ வழிசெய்யும்வகையில் நிரந்தர விசாக்கள் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் Andrew Giles அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்றப்பட்ட வாக்குறுதி
சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு Biloela பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு, குடிவரவு தடுப்புமுகாமிற்கு கொண்டுசெல்லப்பட்ட பிரியா-நடேஸ் குடும்பம் தொடர்ச்சியாக சட்டப்போராட்டத்தை மேற்கொண்டுவந்த பின்னணியில், தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால் இக்குடும்பம் Biloela-இல் வாழ அனுமதிக்கப்படுவர் என உறுதியளித்ததற்கிணங்க, இன்று அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் Andrew Giles தெரிவித்துள்ளார்.
நடேசலிங்கம் குடும்பத்தின் சிக்கலான மற்றும் குறிப்பிட்ட சூழ்நிலைகளை கவனமாக பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இக்குடும்பத்தினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மகிழ்ச்சியில் குடும்பம்
நிரந்தர விசா கிடைத்ததையிட்டு தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் நான்கு ஆண்டுகளுக்கு மேலான தமது போராட்டத்தை தம்மால் மறக்க முயாது எனவும் ஊடகமொன்றிடம் தெரிவித்த பிரியா, தொழிற்கட்சி அரசுக்கும் தமது போராட்டத்திற்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.