இலங்கைத் தமிழரசுக் கட்சி வழக்கு: நேரில் நீதிமன்றில் முன்னிலையான அகிலன்!
இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) வழக்குத் தொடர்பில் தமது இலத்திரனியல் பத்திரிகையில் வெளியிட்ட செய்தி தொடர்பாக நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அகிலன் முத்துக்குமாரசாமி (Akilan Muthukumarasamy) திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் மன்றில் பிரசன்னமானார்.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி வழக்குத் தொடர்பில் வெளியிட்ட செய்தி தொடர்பாகவும் குற்றம் சுமத்தப்பட்ட அகிலன் முத்துக்குமாரசாமியின் வழக்கு இன்று(31) காலை திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் அவர் சார்பில் சட்டத்தரணி ஒருவரும் முன்னிலையானார்.
செய்தி முழுமையாக தம்முடையதுதான் என்று அகிலன் முத்துக்குமாரசாமி ஏற்றுக்கொள்கின்றமையால், அவரைக் குறுக்கு விசாரணை செய்ய வேண்டிய தேவை எழவில்லை என்று மேற்படி நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டை சுமத்தும் எதிராளியான அதிபர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்தார்.
நீதிமன்ற அவமதிப்பு
எனினும், அவர் இழைத்த நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் தொடர்பில் தமது வாதத்தையும் சமர்ப்பணங்களையும் எழுத்தில் தாம் சமர்ப்பிப்பார் என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதற்கும் ஜூலை 19ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கி வழக்கை அந்தத் திகதிக்கு மன்று ஒத்துவைத்தது.
அகிலன் முத்துக்குமாரசாமிக்கு எதிரான பிடியாணை நடைமுறையில் உள்ளமையால் மன்றில் உரிய பிணைகளைச் சமர்ப்பித்து அனுமதி பெற்ற பின்னர் அவர் வெளியேறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |