தமிழ்நாட்டில் கொடூரம்...! வெட்டி படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் - ஆறு பேர் அதிரடி கைது
தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமின் தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமின் தலைவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்த முகாமில் 937 குடும்பங்களைச் சேர்ந்த 2,770 பேர் வசித்து வருகின்றனர்.
மறுவாழ்வு முகாம்
இந்தநிலையில், முகாமின் தலைவராக இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டம் முருங்கன் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்கிற கண்ணா செயற்பட்டு வந்துள்ளார்.
இவர் மீது அடையாளம் தெரியாத குழுவொன்று கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இதையடுத்து, பலத்த வெட்டுக் காயங்களுடன் ஆபத்தான நிலையில், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், குறித்த நபர் இறந்ததை உறுதி செய்துள்ளனர்.
வெட்டிக் கொலை
இதனால் கொதிப்படைந்த இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள் 300-இற்கும் மேற்பட்டோர், மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர்.
பதற்றமான சூழல் நிலவியதால் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்த காவல்துறையினர், உயிரிழந்த நபரின் உடலைப் பிரேத பரிசோதனைக்காகப் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

காவல்துறையின் விசாரணையில் முகாமைச் சேர்ந்த குழு ஒன்று, முன்விரோதம் காரணமாக அவரைக் கொலை செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், முகாமில் பதற்றமான சூழல் நிலவுவதால், காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் குறித்துக் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |