இலங்கை மக்கள் மாட்டு வண்டிகளில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும் : சீலரத்ன தேரர் எச்சரிக்கை
இலங்கையில் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால், சாதாரண மக்கள் எதிர்காலத்தில் மாட்டு வண்டிகளில் பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தினாலும், தவறான பொருளாதார முகாமைத்துவத்தினாலும் தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களை மிக மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பத்தரமுல்லையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
போராடிய மக்கள்
அங்கு மேலும் தெரிவிக்கையில், சுபீட்சமான வாழ்வை எதிர்பார்த்து, அதற்காகப் போராடி, ஜனாதிபதி செயலகம் மற்றும் நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்று, மக்கள் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தனர்.

ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும், மக்களுக்கு வழங்கிய எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
நாட்டு மக்கள் டித்வா போன்ற இயற்கை அனர்த்தங்களைச் சந்தித்த வேளைகளில், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கூட இந்த அரசாங்கம் செய்துகொடுக்கவில்லை.
பேருந்து கட்டணங்களை உயர்த்தல்
டீசல் விலை அதிகரிப்பால் பேருந்து கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஏழை மக்கள் ஒரு தேநீர் அருந்தக் கூட வழியில்லாத, பேருந்தில் பயணிக்கக் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இப்போதே நிலைமை இப்படி என்றால், இன்னும் சில காலத்தில் வரலாற்றில் பயன்படுத்திய மாட்டு வண்டில்களில் தான் மக்கள் பயணிக்க நேரிடும். இந்த நிலையை நோக்கித்தான் அரசாங்கம் மக்களைக் கொண்டு செல்கிறது.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |