ஸ்ரீலங்கா பிரஜைகளுக்கு அங்கீகாரம் பெறப்படாத சீனாவின் தடுப்பூசி- அம்பலமான தகவல்!
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரம் இதுவரை பெறப்படாத சீனாவில் உற்பத்தியான சினோபார்ம் தடுப்பூசிகள் ஸ்ரீலங்கா பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை 1000 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி வழங்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கின்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஏதாவது பக்கவிளைவு ஏற்பட்டால் ஸ்ரீலங்கா அரசாங்கமே அதனைப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சுமார் 6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளை சீன அரசாங்கம் அண்மையில் ஸ்ரீலங்காவுக்கு அன்பளிப்பாக அனுப்பிவைத்திருந்தது. சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிகளின் வினைத்திறன் ஆய்வு மட்டத்திலேயே காணப்படுகின்ற நிலையில் அதனை நாட்டு மக்களுக்கு வழங்குவதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமாயின் அதற்கு கொவிட் தடுப்பூசி தொடர்பில் ஆராயும் குழுவே பொறுப்பேற்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகள் ஆரம்பத்தில் ஸ்ரீலங்காவிலுள்ள சீனப் பிரஜைகளுக்கு மாத்திரமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் தற்போது ஸ்ரீலங்காப் பிரஜைகளுக்கும் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகின்றமை தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை ஊடகமொன்று வினவிய போது, அதன் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரத்னசிங்கம் இதனைத் தெரிவித்தார்.
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிகளை ஸ்ரீலங்கா பெற்றுக் கொண்டுள்ள போதிலும் அதன் வினைத்திறன் எவ்வாறானதாக அமையும் என்பது இன்னும் ஆய்வு மட்டத்திலேயே காணப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த தடுப்பூசிகள் ஸ்ரீலங்காவிலுள்ள சீன பிரஜைகளுக்கு மாத்திரமே வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது 1000 ஸ்ரீலங்காப் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தடுப்பூசியின் வினைத்திறன் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுத்து அதன் உண்மை தன்மை குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் பதிலளித்துள்ளார்.