அலரிமாளிகையில் தொலைக்காட்சிகளை கொள்ளையிட்ட நபர் கைது..!
அலரிமாளிகையில் இருந்து இரண்டு தொலைக்காட்சி பெட்டிகளை கொள்ளையிட்டு சென்ற நபரை கிருளைப்பனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட குறித்த நபர் சமையல் கலைஞராக தொழில் புரிந்து வருபவர் எனவும் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான நபர் எனவும் காவல்துறையினர் மேலும் தெரித்துள்ளனர்.
இரண்டு தொலைக்காட்சி பெட்டிகளில் ஒன்று சந்தேக நபர் தங்கியிருந்த விடுதியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மற்றைய தொலைக்காட்சி பெட்டி 10 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு 54 அங்குல தொலைக்காட்சி பெட்டிகளில் பெறுமதி ஆறு லட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை கிருளைப்பனை காவல்துறையினர் முன்னெடுத்துவருகின்றனர்.
வெடித்த மக்கள் புரட்சி
இலங்கையில் கடந்த ஜூலை மாதம் 09 ஆம் திகதி வெடித்த மக்கள் புரட்சியை தொடர்ந்து அலரிமாளிகை போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டது.
இதேவேளை, முற்றுகையிடப்பட்ட அலரிமாளிகை பொது மக்கள் பார்வைக்கு விடப்பட்டிருந்தது. இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் அங்குள்ள பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முற்றுகையின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.