இத்தாலி மகளிர் கிரிக்கெட் அணியின் இலங்கை பயிற்சியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு
இத்தாலி மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் இலங்கையர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
57 வயதான பிரபாத் ஏக்னெலிகொடா என்ற இவர், இத்தாலி கிரிக்கெட் சம்மேளனத்தின் தற்போதைய தலைவர் மரியா ஹாஸ் பாஸின் துணையாளர் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரோம் நகரின் ஸ்பினாசெட்டோ மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராகப் பணியாற்றிய பிரபாத் எக்னலிகோட மீதான இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ரோம் சட்ட அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மகளிர் கிரிக்கெட் அணி
இத்தாலிய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல என்ற சந்தேகங்கள் உள்ளதாக ஊடகங்கள் விவரித்துள்ளன.
கிரிக்கெட் உலகில் அவரது நடவடிக்கை மற்றும் செல்வாக்கு காரணமாக பல வீரர்கள் அவர் மீது ஆழ்ந்த பயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட வீரர்களில் ஒருவரின் முறைப்பாட்டில், பலர் தங்கள் விளையாட்டு வாழ்க்கை பாழாகிவிடும் என்ற பயத்தில் இவற்றை பற்றி அமைதியாக இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
அவருக்குக் கீழ்ப்படியாத எந்தவொரு வீரரின் எதிர்காலத்தையும் இருட்டடிக்கும் அளவுக்கு அவரது தொடர்பு வலையமைப்பு மூலம் போதுமான செல்வாக்கு இருந்தது என்பதை குறித்த முறைப்பாடு மேலும் வலியுறுத்துகிறது.
இத்தாலிய மகளிர் தேசிய அணியில் இடம் வழங்குவதற்காக அவர் மூன்று வீராங்கனைகளுடன் தகாத நடத்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஒரு வீராங்கனை, இதன் விளைவாக, தேசிய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று செய்திதாள் விவரித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |