கொழும்பில் மாணவி கொடூர கொலை - கைதான இளைஞன் தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவு
கொழும்பு குதிரை பந்தய திடலில் பல்கலைக்கழக மாணவி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கறுவாத்தோட்டம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று மாலை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸின் அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது இளைஞனை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இன்று (18) உத்தரவிட்டார்.
காவல்துறையினர் நீதிமன்றில் அறிக்கை

கறுவாத்தோட்டம் காவல்துறையினர் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்ததுடன் இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்

சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், தேசிய மனநல மருத்துவ நிறுவகத்தின் விசேட வைத்தியர் ஒருவரை அணுகி, அவரது மன நிலை குறித்து அறிக்கை பெறுமாறு சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேக நபரை தேசிய மனநல மருத்துவ நிறுவனத்தின் விசேட வைத்தியரிடம் அனுப்பி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஹோமாகம கிரிவத்துடுவ புபுது உயனேவில் வசிக்கும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் சதுரி ஹன்சிகா மல்லிகாராச்சி என்ற மாணவியே உயிரிழந்தவர் ஆவார்.