பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ள மாணவர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான ஆறு ஆண்டு காலப்பகுதியில் 267,138 மாணவர்கள் பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
2018 முதல் 2024 வரையான வருடாந்திர பாடசாலை மாணவர் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் முதலாம் தரம் முதல் பத்தாம் தரம் வரை ஒவ்வொரு வகுப்பிலும் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் விலகிய விகிதங்களைக் கருத்தில் கொண்டு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சமன்பாட்டைப் பயன்படுத்தி இந்தத் தரவுகள் கணக்கிடப்பட்டுள்ளன.
பொருளாதார நெருக்கடிகள்
அதற்கமைய பாடசாலை கல்வியை இடைநிறுத்திய மாணவர்களின் எண்ணிக்கை 2018 இல் 38,839 ஆகவும், 2019 இல் 41,503 ஆகவும், 2020 இல் 32,540 ஆகவும், 2021 இல் 25,492 ஆகவும், 2022 இல் 52,596 ஆகவும், 2023 இல் 50,345 ஆகவும், 2024 இல் மற்றும் 25,823 ஆகவும் பதிவாகியுள்ளது.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்கால கொரோனா பெருந்தொற்று பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவே ஏராளமான மாணவர்கள் தங்கள் படிப்பை இடைநடுவில் நிறுத்தியுள்ளமை புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அவ்வாறு இடைவிலகிய மாணவர்களில் சிலர் சர்வதேச பாடசாலைகளில் சேருதல் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் வெளிநாடுகளுக்குச் செல்லுதல் போன்ற காரணங்களால் பாடசாலை அமைப்பிலிருந்து விலகினாலும் அவர்கள் தொடர்ந்து முறையான கல்வியைப் பெற்றுக் கொண்டிருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.
பிள்ளைகள் பாடசாலை கல்வியை இடைநிறுத்துவதற்குத் தனிப்பட்ட காரணங்கள், பாடசாலை சார்ந்த காரணங்கள், குடும்பம் சார்ந்த காரணங்கள், சமூகக் காரணங்கள் மற்றும் பிற கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்றவை முக்கிய காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்