தனது அரசியல் தேவைக்காக முன்னாள் போராளிகளை பயன்படுத்தும் சுமந்திரன் : யாழ்.பல்கலை விரிவுரையாளர் குற்றச்சாட்டு
சுமந்திரன் அரசியல் தேவைகளுக்காக முன்னாள் போராளிகள், மாவீரர்கள் தொடர்பான கருத்துகளை கூறுகிறார். இது எவ்வளவு காலத்திற்கோ தெரியவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், போர்க் குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு கால அவகாசம் கோரினார், புலிகளும் போர்க் குற்றங்கள் புரிந்தார்கள் அவர்களையும் விசாரிக்க வேண்டும், புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும் என்று கடந்த காலங்களில் கூறினார்.
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறிய விடயம்
தற்போது, தமிழரசு கட்சிக்குள் முன்னாள் போராளிகளுக்கும், மாவீரர் குடும்பங்களுக்கும்தான் முன்னுரிமை உள்ளது என்று கூறுகிறார். இது குறித்து தங்களது கருத்து என்ன ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்நாட்டு அரசியல் போல்தான் நாங்கள் இதனை பார்க்க வேண்டும். மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறிய விடயம் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்று. அதுபோலதான் எமது அரசியல்வாதிகள் தற்போது செய்கின்றார்கள் என்பது எனது சுருக்கமான விடை. இதில் நிறைய விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.
அரசியல் தேவைக்காக எவ்வாறு நடந்து கொள்கின்றார்
மேற்படி நீங்கள் கூறிய வசனங்களை பயன்படுத்திய நபர் தற்போது, முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்களுடன் அரசியல் தேவைக்காக எவ்வாறு நடந்து கொள்கின்றார் என நீங்களே பார்க்கின்றீர்கள்.

எங்களது தலைவிதியை தீர்மானிக்கும் வழியை நாங்கள் ஒருவரது கைகளில் கொடுக்கவில்லை. அந்த சட்டத்தரணி கூறிய கருத்துக்களுக்கு பல்கலைக்கழக சமுகமோ, முற்போக்கான அமைப்புக்களோ எதிரான கருத்துக்களை தெரிவித்திருக்க வேண்டும்.
அவர் தன்னுடைய அறிவுக்கு எட்டிய வகையில் தனது கருத்துக்களை சொன்னார். அதை நாங்கள் ஏற்க வேண்டிய தேவையில்லை. விரும்பினால் நிராகரிக்கலாம். கட்டாயமாக ஏற்க வேண்டிய தேவையில்லை.
இந்த மண்ணில் என்ன நடந்தது
ஆனால் இந்த மண்ணில் என்ன நடந்தது என்பதை நாங்கள் சரியான முறையில் அறிய வேண்டும். புலிப் போராளிகள் மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டார்களா? என்று நாங்கள் சிந்திக்க வேண்டும்.

அவர் அரசியல் தேவைக்காக இவ்வாறான கருத்துக்களை கூறியிருந்தார். தற்போது அவரது செயற்பாடுகளை பார்க்கின்றபோது எங்களது அரசியல் களத்திற்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றியுள்ளார்போல தான் தெரிகிறது. இது எவ்வளவு காலத்துக்கோ தெரியவில்லை என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |