பொது முடக்கத்திற்கு ஆதரவு வழங்குங்கள்:தமிழ்தேசிய கட்சிகள் கோரிக்கை!
வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்புக்களும் எதிர்வரும்(20) முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கத்திற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு தமிழ்த்தேசியகட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்தவிடயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வவுனியா வைரவ புளியங்குளத்தில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் காரியாலத்தில் நேற்று (16)இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த கட்சிகளின் பிரதிநிதிகள், முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா மீதான அச்சுறுத்தலின் மூலம் நீதித்துறை சுயாதீனமாக செயற்படமுடியாத நிலமை ஏற்பட்டுள்ளது.
தமிழர் பிரச்சனைக்கு
அத்துடன் தமிழர் பிரச்சனைக்கு உள்நாட்டில் நீதியை காணமுடியாது என்று நாம் வலியுறுத்திய விடயத்திற்கு இந்த சம்பவம் சிறந்த எடுத்துகாட்டாகவும் அமைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் தமிழ்மக்களின் கவனத்தை திசைதிருப்பும் செயற்பாட்டை இந்த அரசாங்கமும், அதிபரும் முன்னெடுத்துவருகின்றனர்.
எனவே இந்த அரசியல் சூழ்நிலையில் அதிபரின் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து எதிர்காலத்தில் எப்படி செயற்படவேண்டும் என்ற காத்திரமான முடிவை எடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்மக்களும் தமிழ்த்தேசிய கட்சிகளும் தள்ளப்பட்டுள்ளது.
பொது முடக்கத்திற்கு
எனவே எதிர்வரும் (20) வடகிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கத்திற்கு பொதுமக்கள் வர்த்தகசங்கத்தினர், பேருந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் உட்பட அனைத்து பொது அமைப்புக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,தமிழ்மக்கள் விடுதலைக்கழகம் சார்பில் சந்திரகுலசிங்கம் மோகன்,தமிழரசுக்கட்சி சார்பில் ந.கருணாநிதி,ஜனநாயக போராளிகள் கட்சி சார்பில் க.துளசி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆதரவு வழங்க மாட்டேன்
இந்நிலையில் தமிழ் தேசிய கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள பொது முடக்கத்திற்கு தான் ஆதரவு வழங்க மாட்டேன் என முன்னாள் வட மாகாணசபை உறுப்பினரும் புளொட் அமைப்பின் முக்கியஸ்தருமான ஜி. ரி. லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.
பொது முடக்கம் குறித்த கலந்துரையாடல் தொடர்பில் எனக்கு அறியக்கிடைக்கவில்லை. அத்துடன் குறித்த பொது முடக்கத்திற்கு நான் எனது எதிர்ப்பையும் வெளிப்படுத்துவதுடன் ஆதரவு வழங்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
