வெளிநாடொன்றில் பாடசாலையில் வாள்வீச்சுத் தாக்குதல் : ஒருவர் பலி
மத்திய சுவீடனின் ஃபேகர்ஸ்டா (Fagersta) நகரில் உள்ள பிரினெல் மேல்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற வாள்வீச்சு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (21.08.2026) மதியம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
18 வயதுடைய இளைஞர் ஒருவர் வாளுடன் பாடசாலைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவீடன் பாடசாலை
தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் 12 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இளைஞரை அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கைது செய்துள்ளனர்.
கிட்டதட்ட 450 மாணவர்கள் கல்வி கற்கும் இந்தப் பாடசாலையில், கோடைக்கால விடுமுறைக்குப் பின்னர் பாடசாலை மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர் குறித்த பாடசாலையின் முன்னாள் மாணவர் எனவும், அவர் தலைக்கவசம் அணிந்து வாளுடன் பாடசாலைக்குள் நுழைந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், அவருக்கு எதிராக ஏற்கனவே தாக்குதல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை உறுதியாக வெளியாகவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பாக சுவீடன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |