கிளிநொச்சி வைத்தியசாலைக்குள் இன்றுமாலை இடம்பெற்ற பயங்கரம் - சத்திரசிகிச்சை கூட வாயிலில் நின்றவருக்கு வாள்வெட்டு
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்தின் வாசலில் இடம்பெற்ற வாள் வெட்டில் ஏற்கனவே வாள்வெட்டில் காயமடைந்து சிகிச்சைக்காக காத்திருந்த ஒருவர் மீண்டும் படுகாயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று (09) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மாலை 5.30 மணியளவில் வைத்தியசாலைக்குள் உள்நுழைந்த மூவர் பார்வையாளர்கள் போன்று சென்று குறித்த நோயாளியின் பெயரை குறிப்பிட்டு விசாரித்துள்ளனர். இதன் போது அங்கு கடமையிலிருந்த உத்தியோகத்தர் நோயாளி தியேட்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவர்கள் வைத்தியசாலையின் முதலாவது மாடியில் உள்ள சத்திர கிசிச்சை கூடத்தின் வாசலுக்கு சென்றுஅங்கு சிகிச்சைக்காக காத்திருந்த தாம் தேடிச் சென்ற நபரை வாசலில் வைத்து வெட்டியுள்ளனர். வெட்டுக் காயங்களுக்கு உள்ளானவர் குருதி வடியவடிய சத்திர கிசிச்சை கூடத்திற்குள் ஓடியுள்ளார்.
வெட்டிய நபர்கள் மோட்டார் சைக்கிளில்
தப்பிச் சென்றுவிட்டனர்.
உடனடியாக அருகில் உள்ள கிளிநொச்சி காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கிய
போதும் அரை மணித்தியாலயங்களுக்கு பின் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர்
விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.