புலிகள் தோற்கடிக்கப்படவில்லை: புலம்பித் திரியும் நாமல்.!
புலிகள் அமைப்பு கருத்தியல் ரீதியில் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை என்பதாலேயே கனடாவில் இனவழிப்பு நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இனவாதம்
இதேவேளை, தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்பன வேறு, புலிகளின் அபிலாஷைகள் என்பன வேறு. இதை புரிந்துகொள்ள முடியாததால்தான் வடக்கில் பெரும் பின்னடைவை அரசாங்கம் சந்தித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தாம் புலிகளுடனேயே போர் செய்ததாகவும் தமிழ் மக்களுடன் அல்ல என தெரிவித்த நாமல், அது எப்படி இனவாதமாக மாறும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அநுர அரசின் பார்வை
அதனை தொடர்ந்து மேலும் கருத்து தெரிவித்த அவர், “எமது புலனாய்வுப் பிரிவில் முஸ்லிம் அதிகாரிகள் உள்ளனர். விமானப்படையில் தமிழ் அதிகாரிகள் இருக்கின்றனர். போரை முடித்த பிறகு காவல்துறை மற்றும் இராணுவத்துக்கு தமிழ் இளைஞர்கள் இணைத்து கொள்ளப்பட்டனர்.
நாம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுடன் போரிடவில்லை. புலிகளுடன்தான் போரிட்டோம், ஆனால் தற்போதைய அரசாங்கம் ஒட்டுமொத்த தமிழர்களும், புலிகளுக்கு சமனானவர்களாக பார்ப்பதற்கு முற்படுகின்றது. இது தவறு. இந்த விடயத்தில்தான் இனவாதம் உள்ளது.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
