தமிழர்களின் பூர்வீக மதத்தலங்கள் தொல்பொருள் சின்னங்களாக - வர்த்தமானியை மீளப்பெறுமாறு சிறீதரன் கடிதம்
வடமாகாணத்திலுள்ள தமிழர்களின் நான்கு பூர்வீக மதத்தலங்களை புராதன நினைவுச் சின்னங்களாக வெளிப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியை மீளப்பெறுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடிதம் அனுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறித்த கடிதத்தை சிறிலங்கா அதிபருக்கும், துறைசார் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கும் அனுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயம் உள்ளிட்ட குறித்த நான்கு இடங்களும் முறைசார் பூஜை வழிபாடுகள் இயற்றப்படும் தமிழ் மக்களுடைய புராதன மதவழிபாட்டுத் தலங்களாகப் பேணப்பட்டு வரும் நிலையில், மக்களை உணர்வுரீதியான நெருக்கீடுகளுக்கு ஆளாக்கி இனத்துவ அடிப்படையிலான சிந்தனைகளைத் தூண்டும் நோக்கோடு குறித்த மதத்தலங்களை புராதன நினைவுச் சின்னங்களாக வெளிப்படுத்தியுள்ளமை தமிழர்களது பூர்வீக நிலங்களை வலிந்து ஆக்கிரமிப்புச் செய்வதன் அதிஉச்சமான வெளிப்பாட்டு வடிவமாக காணப்படுவதாக சிவஞானம் சிறீதரன் கூறியுள்ளார்.
தேசிய இனங்களுக்கிடையிலான முரண்நிலை

போர்க்கால நெருக்கீடுகள், போரியல் வாழ்வின் இழப்புகள் என்பவற்றில் இருந்து மீண்டெழ முடியாத நிலையில், வாழும் ஈழத்தமிழர்களை, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினதும் அதன் கீழியங்கும் தொல்லியல் திணைக்களத்தினதும் அண்மைக்கால ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேலும் மேலும் பாதிப்புக்குள்ளாக்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஓர் மதவாதச் சிந்தனையின்பாற்பட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் இரு தேசிய இனங்களுக்கிடையிலான முரண்நிலைகளை மேலும் வலுப்படுத்தாது, தமிழர்களையும் இந்த நாட்டின் சகோதர இனத்தவர்களாகக் கருதி, அவர்களது வழிபாட்டுரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் இந்து மற்றும் கிறிஸ்தவ மதச் சின்னங்களையும், தமிழர்களது அடையாளங்களையும் ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளை நிரந்தரமாக நிறுத்த அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் கோரியள்ளார்.
அதற்கான நல்லெண்ணச் சமிக்ஞையாக பறாளாய் முருகன் ஆலயம் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தலை மீள பெறுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறித்த கடிதத்தின் பிரதிகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் வதிவிடப் பிரதிநிதி, சர்வதேச நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள், யுனெஸ்கோ மனித உரிமைகள் ஆணையகம் என்பவற்றுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.