அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்...!
வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் தற்காலிக நாடுகடத்தல் பாதுகாப்பை ரத்து செய்யும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முயற்சிக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உள்நாட்டுப் போர் அல்லது இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் நாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் அமெரிக்காவில் தங்கியிருந்து வேலை செய்ய அனுமதிக்கும் இந்தத் திட்டத்தை 13 நாடுகளுக்கு நீட்டிக்காமல் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் பழமைவாத நீதிபதிகள், இத்தகைய முடிவுகளை ஆய்வு செய்ய கூட்டாட்சி நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளதா என்பதில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.
சட்டப்படி ஆய்வு
சிரியா மற்றும் ஹெய்ட்டி நாட்டுப் பயனாளிகளின் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள், ட்ரம்ப் கொண்டுள்ள இனவெறுப்பு காரணமாகவே இந்தச் செயல்முறை பாதிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டுள்ளனர்.

இறுதி முடிவைச் சட்டப்படி ஆய்வு செய்ய முடியாவிட்டாலும் அந்த முடிவை எடுக்க அதிகாரிகள் கையாண்ட முறையை ஆய்வு செய்ய முடியும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருப்பினும், தற்போதைய சட்டம் இந்த அந்தஸ்தை வழங்குவதற்கும் ரத்து செய்வதற்கும் அரசாங்கத்திற்குப் பரந்த அதிகாரத்தை வழங்கியுள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டியதுடன் சிரியா போன்ற நாடுகளில் தற்போது தரைமட்ட நிலவரம் மாறியுள்ளதாக நீதிபதி பிரட் கவனா குறிப்பிட்டுள்ளார்.
சட்டபூர்வமான ஆய்வு
சட்டப்பூர்வமான மற்றும் சட்டவிரோதக் குடியேற்றங்களுக்கு எதிரான தனது தீவிர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே ட்ரம்ப் இந்த ரத்து நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

குடியேறியவர்கள் சார்பில் வாதிட்ட அஹிலன் அருளானந்தம், சட்டபூர்வமான ஆய்வை நடத்துவதில் மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவுள்ள இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு, வரும் ஜூன் மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |